Saturday, June 2, 2007

கோரிக்கை


தேகம் முழுவதையும்
தீயுண்டு போனாலும்
எஞ்சுகின்ற சாம்பலின்
எளிய உருவம்
நீ...
நீ வகிடெடுத்து சீவிய
கூந்தலின் நடுவில்
தெரிந்த
ஒற்றையடிப் பாதையில்
சென்று கொண்டிருக்கிறது
எனது வாழ்க்கைப் பயணம்...
உன் கால்களின் ரேகையில்
வகிர்ந்த கீற்றுக்களாய்
தெரிந்த பள்ளத்தில்
அடைபட்ட காற்றில்
சிறைபட்டுப் போனது
என் ஜீவன்
துப்பவும் முடியாமல்
விழுங்கவும் முடியாமல்
மென்று கொண்டிருக்கின்ற
சூயிங்கமாய்
உன் நினைவுகள்...
சுவாசக் குழலுக்கும்
உணவுக் குழலுக்கும்
இடையே சிக்கிய
ஒற்றைப் பருக்கை என
என் காதல்
இப்போது
காது அறுந்து போனது என
நீ கழற்றி எறிந்த
காலணியாக நான்...
காலணியோடு கால்களை கூட
எத்தனை முறை வேண்டுமானாலும்
மாற்றிக் கொள்!
தயவு செய்து இனி ஒருமுறை கூட
காதலை மாற்றிவிடாதே!
---நாவிஷ் செந்தில்குமார்

No comments: