Wednesday, August 22, 2007

முதியோர் இல்லங்கள்


வாழும் தெய்வங்கள்
கூடி வாழ்வதால்
கோயில்களாகின்றன
முதியோர் இல்லங்கள்!

புதியன புகுதலும்
பழையன கழிதலும்...
பொருள் வேறாய்ப்
புரிந்துகொண்டவர்களின்
மண உறவு
பெற்றவர்களின் மன முறிவு

இருந்த கடவுளை
துரத்தி விட்டு
எதையோ தேடுவான்
பூஜை அறையில்....

அன்று
தந்தைகள் கான்வென்டில்
கட்டிய தொகைகள் - இன்று
பிள்ளைகளால்
தவனை முறையில்
சேர்க்கப்படுகின்றன...
வயோதிகர் காப்பகங்களில்

பூட்டிய வீட்டிற்கு
காவல் காக்க
நாயை வளர்ப்பான்
ஈன்ற தாயை மட்டும்
ஏதோவொரு
முதியோர் இல்லத்தில் சேர்ப்பான்

கட்டிலின் சத்தத்தில்
கரைந்து போகின்றனவோ
பெற்றோரின் கதறல்கள்?

வந்தவழியை
மறந்தவர்களுக்கு மட்டும்
கருவறையே
கல்லறையாக மாறக்கூடாதோ?
--நாவிஷ் செந்தில்குமார்

அன்னப்பறவை


அன்னப்பறவை இனம்
அழிந்து போனதாக
சொல்கிறார்கள் - இன்னும்
உன்னை பார்க்காதவர்கள்...
தேவதையின் கனவில்
பேய்கள்தான் வரும்
என சொல்வார்கள்
எனவேதான் உனக்கு மட்டும்
டெவில் ட்ரீம்ஸ்
சொல்கின்றேன்.
எல்லோருடைய வாயிலிருந்து
வார்த்தையாக வருவது
உன்னிடம் மட்டுமே
வரமாக வருகிறது.
பூக்களின் தேன்
குடித்து சலித்துப் போன
வண்டுகள் - உன்
வியர்வையை சுவைத்து
வாழவே ஆசைப்படுகிறதாம்!
நீ தூங்கினால் - உன்
கனவாக வேண்டும்
துயில் கலைந்தால் - உன்
நினைவாக வேண்டும்
உன் இதழ் நடுவில்
இளைப்பாறும்
காற்றாக வேண்டும் - உன்
விரல் சொடுக்கில்
வெளியாகும்
ஒலியாக வேண்டும்.
பார் ரதியே!
உன் அழகை பாடினால்
எக்கவியும்
பாரதியே!..
--நாவிஷ் செந்தில்குமார்