Wednesday, December 10, 2008

டிசம்பர் - 11 - இன்று பாரதி பிறக்கும் நாள்

இடிகொட்டும் இரவில்
கருத்தரித்தவனே
கதிரவனும்
உனைக்கண்டுதானடா
கதிர் தரித்தது!

செப்டம்பர் - 11
இரட்டைக் கோபுரம்
இடிந்த தினம்
மட்டுமல்ல - நீ
இறந்ததினமும்தான்
என்பதிங்கே
எத்தனை பேருக்கு
வெளிச்சம்?

பதினொன்றில்
பிறந்தும் இறந்தும்
போனதாலே
உன்னைப் பத்தோடு
பதினொன்றாக
எண்ணிவிட்ட பாவிகளோ
நாங்கள்?

இங்கே எல்லோரும்
பிறந்ததற்காக
இறந்து போக - நீயோ
மீண்டும் பிறக்கவே
இறந்து போனாயடா!

பலரது பெயரோடு
வருகின்ற பாரதியே
இன்று ஒரு
பிள்ளையாகவே
பிறந்து வா
நீ
பாடவும் சாடவும்
வேண்டியது
இன்னும் ஏராளம்
இங்கே...
--நாவிஷ் செந்தில்குமார்

Monday, December 1, 2008

இலக்கிய வெளியீடு

எங்கள் இல்வாழ்க்கையில்
இன்றொரு
இலக்கிய வெளியீடு...

பிரசவிக்கப் போகிறோம்
மடியில் சுமப்பதை
அவளும்...
மனதில் சுமப்பதை
நானும்...

பெயர் சொல்லும்
பிள்ளை ஒன்று தர
முகவரி தந்தவள்
செய்கிறாள்
முழுப்போராட்டம்...

அவள் வயிற்றில்
வலி பெருக - என்
அங்கமெங்கும்
இடி விழும்

யாழிசைக்கும் குரலாளின்
காலுதைக்கும் ஓசை கேட்டு
காது வழியே
செந்நீர் கசியும்

நீண்டு வளர்ந்த தாடியை
நீக்கும்பணி
விரல் தொடுக்கும்
நகம் கடிக்கும்
பழக்கம் வந்து
நட்புறவாய்
ஒட்டி நிற்கும்

பதினொரு ரிக்டர்
அளவான
பூகம்பம் ஒன்று - என்னை
வேரோடு அசைக்கும்

சுற்றம் மறந்து
சுயம் இழந்து
கண்ணீர் பெருகி
காட்சி மறைக்கும் - என்
சரீரம் சற்றே
செத்திருக்கும்

சிசுவின் சத்தம்...
ஜீவன் உயிர்க்கும்
தேகம் முழுக்கப்பல் முளைத்துப்
பலமாய்ச் சிரிக்கும்

பிறந்த மழலை
பார்த்துச் சிரிக்க - அதைப்
பெற்ற குழந்தையோ
மயங்கியிருக்க...

'ஒன்றே போதும்' எனும்
சிக்கன உறுதிமொழியை
மனம் எடுக்கும்
அக்கணம்
தேசப்பற்று என்பதெல்லாம்
இரண்டாம் பட்சம் - என்
தேவதைக்கு ஏதுமாகிவிடுமோ?
என்பதே என் அச்சம்
--நாவிஷ் செந்தில்குமார்

Wednesday, November 26, 2008

சென்னையில் இன்று அடை மழை!!



பொட்டு மழை பெய்யலையே
என்ற ஜனம் இப்போ
கொட்டும் மழையிலே...
தொட்டி மீன்களோ
வெட்டவெளி நீரிலே...

மழை நின்ற தருணங்களில்
மரக்கிளை பெய்கிறது...
வேர்களோடு பூக்களும்
இன்று நீர் குடிக்கின்றன

கடைக்கு வந்த பெண் ஒருத்தியை
காற்றின் துணையோடு
குடையை விலக்கி
தொட்டுப்பார்த்தது மழைத்துளி...

ஊருக்கே பெய்த மழை
ஏனோ
பள்ளி கல்லூரிகளின்
கதவுகளை மட்டுமே
மூடியது...
அலுவலகமெங்கும்
ஆடை நனைந்த
கோலங்களே...

வந்து வந்து போகும்
மின்சாரம்
மொத்தமாய்
நின்றே போனது

தவளைகள் தன்
வாயால் அழைத்தும்
பாவம் பாம்புகள்
பதுங்கியே இருக்கின்றன...

இறுதி கணங்களில்
எரிகிறது மெழுகுவர்த்தி
இதற்கு அடுத்த வரி
இருட்டில் எழுதியது...
சென்னையில் இன்று
அடை மழை!!
--நாவிஷ் செந்தில்குமார்

Tuesday, November 25, 2008

முதுகெலும்பு


பசுமைப் புரட்சி
செய்ய எண்ணி
பஞ்சப் பரதேசி ஆனவர்கள்
நாங்கள்...
வறுமை விலகிய
சந்தோசத்தில்
வாய் விட்டு சிரிக்கையில்
கலைந்த தூக்கத்தோடு
கனவு தொலைய...
துவண்டு போவோம்
நாங்கள்
விதைத்த விதை
மண்ணிலிருந்து
வெளிவராதா? என
விரக்தியோடு
வானம் பார்த்தே
விழிபெருத்தவர்கள்
நாங்கள்
முதுகெலும்பு என்ற
முன்னோர்களின் வார்த்தைக்கு
முரணாக
கூன்விழுந்தவர்கள் என
பெயர் பெற்றவர்கள்
நாங்கள்
வயிற்றுக்கு சோறு கேட்கும்
குழந்தைகளை
வானவில் பிடித்துத் தருவதாகக்
கூறி வளர்ப்போம்
உயிரின் சட்டைப்பையை
ஒருவேளை கஞ்சியால்
நிரப்புவோம்
பட்டினிச்சாவு - எங்கள்
பரம்பரை நோய்
--நாவிஷ் செந்தில்குமார்

Monday, November 24, 2008

நீ




பிற மொழி கலப்பில்லாமல்
கவிதை எழுத
சொன்னார்கள்
தடுமாறினாலும்
தாய்மொழியிலேயே
எழுதிவிட்டேன்...
மோசக்காரர்கள்
இப்போது மொழியே
இல்லாமல் எழுத சொல்கிறார்கள்
என்ன செய்வது
எளிமையாக
உன்னை கை காட்டிவிட்டேன்
--நாவிஷ் செந்தில்குமார்

Sunday, November 23, 2008



உன் அழகை வெளியோர்
பார்த்துவிடக் கூடாதென
தனக்குத்தானே
முலாம் பூசிக்கொண்டது
உன் வீட்டு
ஜன்னல் கண்ணாடி!

நீ ஆடை கலைவதென்னவோ
உன் வீட்டு அறையில
ஏனோ என் மனம்
அலறுது இங்கே
பறை போல...

கடவுள்
என்னை படைத்து பிறகு
உன்னைப் படைத்ததன்
அடிப்படை நோக்கம்
ஒரு கவிதை படைத்தலே...

இவள்
மார்பில் மச்சம்
ம்ம்..
மச்சத்துக்கே மச்சம்.

உன்னை மட்டும் உள்ளடக்கிய
"Photo" கொடு
தேவதை தொழிற்சாலைக்கு
"Motto" கேட்கிறார்கள்
என்னிடம்...


-நாவிஷ் செந்தில்குமார்