Sunday, June 17, 2007

ஒரு கல்லறை பேசுகிறது!

உன் காது மடல் சிவந்தாலே
துடிதுடித்துப் போவானே - இவன்
ஜீவன் துவண்டு போகையில்
கொஞ்சமேனும் வலித்ததா உனக்கு?
நீக்கமற உன் நினைவுகள் சுமந்தவன்
உறங்காமல் காத்துக் கிடந்த
நாட்கள்தான் எத்தனையோ?
இந்த நிரந்தர உறங்கலுக்காக...
வாழுகையில் மரணம் தேடியவன்
வானுலகில் மானுடம் தேடுகின்றான்

என்றேனும், உன் சந்ததியின்
சடங்கு முடிக்க
கல்லறை நோக்கி வருகையில்
ஒரு கவியின் சத்தம் கேட்டால்
சற்று செவி சாய்த்துவிட்டுப் போ பெண்ணே!

கல்லறைக்குள் உடல் புதைத்து
வெளியே...
காவல் காக்கின்ற பாவி இவன்!
நீ மரணித்து வருவாய் என்றல்ல
மலர் கொண்டு வருவாய் என...

உனது புரிந்து கொள்ளலுக்காகவே
புதைந்து கிடக்கின்றன
இவன் காதலின்
புகழ் மொழிகள்
பூக்கள் பறிக்கையில்
உன் விரலில் முள் பதிக்கும்
ரோஜாக்களின் மொழிகளை
கேட்டுப்பார்
இவன் மரணத்தைப் பேசும்

சில கணமேனும் நீ
சூடிய பூக்களை
கல்லறையில்
பூஜைக்கென வை
அப்போதாவது, அவனது
ஆன்ம தாகம் அடங்கட்டும்

காதல் இருந்தால்
உன் இதழ் பதித்து
எச்சில் தடவி ஜீவனை
ஈரப்படுத்திவிட்டுப் போ!
இல்லை
கருணை இருந்தால்
சிறிது கண்ணீர் விட்டுப் போ!
அவனுக்கு தாகம் என்றால்
தண்ணீராகட்டும்
இல்லையென்றால்...
காறி உமிழ்ந்துவிட்டுப் போ!
இதுவே
காதலுக்காக செத்தவனின்
கடைசி சமாதியாகட்டும்!..
---நாவிஷ் செந்தில்குமார்

3 comments:

Anonymous said...

அருமையான கவிதைகள் நண்பரே. நிறைய தமிழ் வலைட்திரட்டிகள் உள்ளன அவறில் நீங்கள் இதை பட்டியலிடலாமே.

அஜித் குமார் said...

SUPER PA............

Something_new said...

arumai..navish...nenjai thottu vittai..