Friday, June 22, 2007

காயாமரம்

முழுமையற்ற வார்த்தைகளை
மொழிந்து என்னை அழைப்பீர்கள்
முந்தானை பற்றி - என்
சிந்தனை கலைப்பீர்கள்

கட்டியணைக்கும் நோக்கோடு
கையிரண்டை விரிப்பீர்கள்
காலையில் குளித்த என்னை
அழுக்காக்கத் துடிப்பீர்கள்
கடைசியில் என் மார்பில்
கன்னம் வைத்துப் படுப்பீர்கள்

உங்களின் ஒவ்வொரு செயலிலும்
உள்ளது சொர்க்கமே
இப்படியே காலம் போனால்
என் வாழ்வும் சுவைக்குமே

பெற்றெடுக்கவில்லை என்றாலும்
பிள்ளைகள் என்றானீர்கள்
மடியில் பரவி - மனதில்
மகிலம்பூ மலரச் செய்தீர்கள்

சொல்லுங்கள்! சொல்லுங்கள்!!
அருமை மழலைகளே
"அம்மா" என்றொரு முறை
அலறுங்கள்...

மாலையில் அடங்கிடும்
சத்தம்
மழலைகளை அழைக்கும்
வீடுகள் தத்தம்!

மடியில் கனமில்லை என்றால்
வழியில் பயமில்லை என்பார்களே!
என் மடியில் கனமில்லை
அதனால் என் வாழ்க்கையே
பலனில்லையே!
குப்பைத்தொட்டிகள் கூட
குழந்தைகள் சுமகின்றனவே
என் குறுவயிற்றுக்கு
கொடுப்பினை இல்லையே!

இறைவா!
முகம் பார்க்க
கண்ணாடி தந்தாய் - அதில்
மூலம் பூச
மறந்து போனாயே!

என்னை இடுகாடு
இட்டுச் செல்லவிருப்போரே
இறந்தபிறகு என் புதைகுழியில்
பூக்களை தூவாதீர்கள்
புழுக்களை தூவுங்கள்!
அவை என் அடிவயிற்றில்
துள்ளக்கண்டு
என் ஆத்மா
சாந்தியடையட்டும்! - கூடவே
என்னை புதைத்த இடத்தில்
புற்பூண்டுகளை
வளரவிடுங்கள்
அவைகளை தின்றுவிட்டு
ஆடுமாடுகளாவது
"(அ)...ம்...மா..." என்றலரட்டும்!
---நாவிஷ் செந்தில்குமார்

3 comments:

Unknown said...

Kayamaram is really i liked.........very much........


By
Kumaresh.

Unknown said...

hey its really nice.. touchable..especially " amma entru adavathu koopudungra unga thought"

Anonymous said...

Last stanza is really nice.

அவளின் எண்ண ஒட்டத்தை சமுதாயத்துடன் இனைத்து எழுது அது இன்னும் உன் கவிதைக்கு உயிர் சேர்க்கும் கொடுக்கும்