Thursday, September 3, 2009

அப்பா

அப்பா...
வாழ்க்கை தந்த
உன் பெருமையை
எந்தக் கவிதையால்
சொல்லிவிட முடியும்?

உழைத்துக் களைத்த
உன் கை கால்களை
மிதிக்கச் சொல்வாய்...
அறியாத வயதில்
மிதித்ததை நினைத்து
இதயம் வலிக்குதப்பா!
இப்போதென்றால்
முத்தம் வைத்திருப்பேன்!

நீ அதிகம் கற்றதில்லை
என்பதாலே
கணக்குத் தெரியாதவனாய்
இருந்தாயோ?
எனக்குக் காசு கொடுக்கும்
போதெல்லாம்...

உனக்கு ஆடை வாங்கும்போது
விலையைப் பார்ப்பாய்!
எனக்கு மட்டும்
தரத்தைப் பார்ப்பாய்...

நீ வியர்வையில் எழுதிய
என் தலையெழுத்து
இன்று
குளிர்சாதன அறையில்
குளிரில் நடுங்குதப்பா!

என்னுடைய
வெற்றிகளுக்குப் பின்னால்
நீ இருக்கிறாய்!
தோல்விகளுக்குப் பின்னால்
உன் தோள் இருக்கிறது!

எனக்காக வாழ்கின்ற உனக்கு
எது வேண்டுமானாலும்
வாங்கித்தருவேன்!
செருப்பைத் தவிர...
காலமெல்லாம் உன்
கால்களுக்குச் செருப்பாக
நானேயிருப்பேன் அப்பா!