Thursday, August 5, 2010

ஆனந்தவிகடனில் வெளியாகியிருக்கும் கவிதை

உடையும் கனவு
***************************************
மாநகரின் மையத்தில்
வீடுகட்ட வேண்டுமென்ற
கனவை நிஜமாக்க
விலைக்கு வந்த
வீடொன்றை வாங்கி
இடித்தோம்...

வாழ்ந்து கெட்ட
குடும்பத்தின் கனவொன்று
செங்கல் செங்கலாக
விழுந்தது!
00
கையசைப்பு
*****************************
ரயில் பயணங்களில்
உடல் குலுங்கும்போது
வழிநெடுகிலும்
கையசைக்கும் குழந்தைகளுக்காக
ரயில் பதிலுக்கு
தன் உடல் அசைப்பதாகவே
உணர்கிறேன்.
00
ஏக்கம்
*****************************
அலுவலகம் விட்டு வரும்
பெற்றோரை
ஐந்து மணியிலிருந்து
எதிர்பார்த்து ஏமாந்து
உறங்கிப்போன குழந்தை
தேக்கிவைத்திருந்த முத்தங்கள்
இரவு ஒன்பது மணிக்கு
குட்டி வாயிலிருந்து
எச்சிலாக வடிகிறது.
(இந்த வாரம் ஆனந்த விகடனில் வந்திருக்கிறது)
--நாவிஷ் செந்தில்குமார்