Thursday, September 9, 2010

ஆனந்த விகடனில் வெளியான கவிதை

உணவே மாத்திரை
*****************************************
'இரண்டு நாளா
மூட்டுவலி, காய்ச்சல்
அடிக்குது...
ஒரு மாத்திரை இனாமாகக்
கொடுப்பியா தம்பி?' என்றாள்
பிள்ளைகளால் கைவிடப்பட்ட
லட்சுமிப் பாட்டி.

'ஆகாரத்துக்குப் பின்
ஒரு நாளுக்கு
மூன்று வேளை...'
எனச் சொல்லி
கொடுத்தார்
மருந்துக்கடை ராசு அண்ணன்.

'நாளுக்கு ஒரு வேளையென
மூன்று நாளுக்குத்
தின்னலாமா?' எனப்
பரிதாமாகக் கேட்டாள்
பாட்டி!

(நன்றி: ஆனந்த விகடன்)
00
அவனுக்கு இன்னொரு பெயரும் உண்டு
********************************************
சித்தாள் வேலை செய்கிற
அவனை
கொத்தனார், தச்சர் உள்ளிட்ட
வீட்டு வேலை பார்ப்பவர்கள்
'டே.. ஊமையா...' என்றுதான்
அழைப்பார்கள்.

மதியச் சாப்பாட்டிற்குப் பிறகு
ஓய்வெடுக்கும் போது
வீடு கட்ட
குவிக்கப்பட்டிருக்கும் மணலில்
'ராமு' என்ற தன் பெயரை
எழுதி
கொஞ்சநேரம் வெறித்துவிட்டு
அழிப்பான் அவன்.
--நாவிஷ் செந்தில்குமார்

Thursday, August 5, 2010

ஆனந்தவிகடனில் வெளியாகியிருக்கும் கவிதை

உடையும் கனவு
***************************************
மாநகரின் மையத்தில்
வீடுகட்ட வேண்டுமென்ற
கனவை நிஜமாக்க
விலைக்கு வந்த
வீடொன்றை வாங்கி
இடித்தோம்...

வாழ்ந்து கெட்ட
குடும்பத்தின் கனவொன்று
செங்கல் செங்கலாக
விழுந்தது!
00
கையசைப்பு
*****************************
ரயில் பயணங்களில்
உடல் குலுங்கும்போது
வழிநெடுகிலும்
கையசைக்கும் குழந்தைகளுக்காக
ரயில் பதிலுக்கு
தன் உடல் அசைப்பதாகவே
உணர்கிறேன்.
00
ஏக்கம்
*****************************
அலுவலகம் விட்டு வரும்
பெற்றோரை
ஐந்து மணியிலிருந்து
எதிர்பார்த்து ஏமாந்து
உறங்கிப்போன குழந்தை
தேக்கிவைத்திருந்த முத்தங்கள்
இரவு ஒன்பது மணிக்கு
குட்டி வாயிலிருந்து
எச்சிலாக வடிகிறது.
(இந்த வாரம் ஆனந்த விகடனில் வந்திருக்கிறது)
--நாவிஷ் செந்தில்குமார்

Thursday, July 22, 2010

சதுரமான செவ்வகம்

சதுரமான செவ்வகம்
****************************
ஏதோவொன்றை வரைந்துவிட்டு
இதுதான்
சதுரமென்றாள் அனைகாகுட்டி
இல்லவே இல்லை
இப்படித்தான் இருக்கும்
சதுரமென்றேன்
ஏற்றுக்கொள்ளாதவளாக
இப்படியும் இருக்கலாம்
சதுரமென்றாள்...
இங்கே எல்லாம் அதுவாகவே
இருப்பதில்லை என்பதாலும்
குழந்தைக்காக சதுரமே
வளைந்துகொடுக்கத் தயாராக
இருப்பதாலும்
இதுவும் சதுரம்தான் என்ற
முடிவுக்கு வந்தோம்!
00
சிதைவுகள்
****************************
ஆறு குளங்களை
வரையச் சொன்னபோது
அவ்வளவு நேர்த்தியாக
அடுக்குமாடிக் குடியிருப்புகளை
வரைந்துமுடித்தாள்
அனைகாகுட்டி!
00
வேஷம்
****************************
நாலுவயதுக் குழந்தையின்
பிறந்தநாள் விழாவிற்கு சென்றிருந்தேன்...
டாக்டர், வக்கீல் போன்ற
உடைகளை வாங்கிவந்திருந்த
விருந்தினர்கள்
ஆசையோடு அணிவிக்க அணிவிக்க
எல்லாவற்றையும் களைந்துவிட்டு
மீண்டும் மீண்டும்
குழந்தையாகவே நின்றது!
--நாவிஷ் செந்தில்குமார்

Monday, July 5, 2010

தொடர்பில்லாதவை

மூங்கில்களற்ற காடொன்றில்
புல்லாங்குழல் தேடி அலைந்து
களைத்துப் போகிறது
காற்று

கொட்டும் மழையில் நனைந்ததாலே
குரல் மாறிப் போனது...
நான் குயில்தான் எனச்
சத்தியம் செய்தது
காக்கையொன்று

முழுதும் சுவைத்தபின்
தூக்கி எறிந்தவனுக்கும்
தெரியாமல்
யாரோ சிலருக்கென
கனிகளை ஒளித்துவைத்திருக்கிறது
மாங்கொட்டையொன்று

காலுக்கு
புதுச்செருப்புப் போட்டு
கண்ணாடியில்
முகம் பார்த்தேன்
அழகாய்த் தெரிந்தது!

உண்ணுகிற
ஒவ்வொரு பருக்கையிலும்
தன் பெயர் இருப்பதாகச்
சொல்கிறவன்
தட்டில் மீதம் வைக்கிற
பருக்கைகளிலிருந்து
எவனோ ஒருவன்
பெயரை அழிக்கிறான்!


நன்றி : திண்ணை.காம்

Saturday, July 3, 2010

மூன்று கவிதைகள்

விளையாட்டு
********************************
பேருந்து வரத்தாமதித்த
ஒவ்வொரு கணத்தையும்
நிறுத்தத்தில் காத்திருந்த
பள்ளிச்சிறுமியின் மீது
வீசி விளையாடிக்
கொண்டிருந்தேன்.
00
பிம்பத்தின் மரணம்
********************************
மாலைப் பொழுதொன்றின்
நிசப்தத்தில்
பேரிரைச்சலுடன் ஏதோவொன்று
கிணற்றில் விழுந்தது
ஓடிச்சென்று பார்ப்பதற்குள்ளான
சில கணங்களின்
தாமதத்தில்
ஆடி ஆடி மிதந்துகொண்டிருந்தது
எனது பிம்பம்.
00
ருசி
********************************
அதிகம் ருசியில்லாத
இட்லிக்கடையில் சாப்பிட
அடிக்கடி
அழைக்குமென்னைத்
திட்டுகிற
நண்பனுக்குத் தெரியாது
அக்கடைக்காரப் பெண்மணிக்கு
என் அம்மாவின் சாயல்
இருப்பது!

--நாவிஷ் செந்தில்குமார்

Tuesday, June 29, 2010

தாகம்

தண்ணீர்த் தொட்டியில்
தெரிந்த வானத்தில் இருந்த
மேகத்தைக் கொத்திக் கொத்தி
தாகத்தைத் தீர்த்துக்கொண்டது
காகமொன்று!
00
மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டி
மரத்தின் காலடியில்
என்ன சொல்லி
கெஞ்சியழுகின்றன
உதிர்ந்த சருகுகள்?
00
அனுமதி பெறாமலே
வீடு நுழைந்து
நாற்காலியிலமர்ந்திருந்த வெயில்
ஜன்னல் கதவுகளடைத்துத் திரும்புவதற்குள்
சொல்லிக்கொள்ளாமல்
எந்த வழியாக
வெளிச்சென்றிருக்கும்?
00
விளையாடிக் களைத்து
வீடு திரும்பும் குழந்தையின்
பிரிவைத் தாங்காத கடல்
ஓடிவந்து பேரலையடித்து
கால் நனைப்பது தவிர
எப்படி உணர்த்தும்
குழந்தையின் மீதான
பிரியத்தை?
00
பேருந்து என் ஊரை
அடைந்த நேரத்தில்
எந்த ஊரைச்
சென்றடைந்திருக்கும்
எதிர்த்திசையில்
ஓடிய மரங்கள்?

Friday, June 25, 2010

மூன்று கவிதைகள்

நிராகரிப்பு
*****************************************
வீட்டருகே தேங்கியிருந்த
மழைநீரில்
குழந்தையின்
நிராகரிப்பின் சுமை தாங்காது
அமிழத்தொடங்கிய
அழுக்கேறிய
பழைய பொம்மையை
எடுத்து
பிரியங்களுடன்
அணைத்துக்கொண்டேன்…
அழத்தொடங்கியது
பொம்மை.
00
சமையல் குறிப்பு
*****************************************
இருநூறு மில்லி
ஆவின் பாலில்
இரண்டு தேக்கரண்டி
சர்க்கரை கலந்து
வெதுவெதுப்பான சூட்டிலே
காயவிட்டு
வெண்மை மாறுமுன்
இறக்கிவிட்டால்
தாய்ப்பால் தயார்.
00
வானவில்
*****************************************
பென்சிலைக் கொடுத்து
வானவில்
வரையச் சொன்னேன்
குழந்தையிடம்
ஏழு வண்ணங்களுக்கு
என்ன செய்கிறாளென்ற
எதிர்பார்ப்போடு…
மழையை வரைந்துவிட்டு
நிற்கும்வரை காத்திரு
வானவில் வருமென்றாள்!
--நாவிஷ் செந்தில்குமார்

Tuesday, June 1, 2010

குழந்தைகள் உலகம்

பொருட்களைக் கலைத்துப்போட்டு
விளையாடும் குழந்தை
கோடை விடுமுறைக்கு
பாட்டி வீட்டிற்கு
சென்றதிலிருந்து
தானே கலைத்து
தானே கூட்டி
நாட்களைக் கடத்துகிறாள்
அம்மா.

ரயிலில்
சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்த
அம்மாவிடம் கேட்காமலே
ஒரு கை உணவை எடுத்து
என்னை நோக்கி
'ஆ...' என்றது குழந்தை.
இன்றுவரை
மென்று கொண்டிருக்கிறேன்
அந்த நிகழ்வை...

அழைப்புமணியை
அழுத்திவிட்டு
ஓடி ஒளியும் சிறுமி
தவறிவிழுந்து காயம்பட்டதிலிருந்து
யார் வந்து அழைத்தாலும்
தாமதமாகவே
கதவு திறக்கிறேன்.

ஆட்கள் குறைவாக இருந்ததால்
ஆட்டத்தில்
என்னையும் சேர்த்துக்கொண்ட
குழந்தைகள்
எனது பால்யத்தை
மீட்டெடுப்பதற்குள்ளாக
ஆடத் தெரியவில்லையென
நீக்கிவிடுகிறார்கள்.

அலுவலகம் விட்டு வரும்
பெற்றோரை
ஐந்து மணியிலிருந்து
எதிர்பார்த்து ஏமாந்து
உறங்கிப்போன குழந்தை
தேக்கிவைத்திருந்த முத்தங்கள்
இரவு ஒன்பது மணிக்கு
குட்டி வாயிலிருந்து
எச்சிலாக வடிகிறது.

கோடை விடுமுறையில்தான்
கோபித்துக்கொண்டு
வெளிச்சென்ற குதூகலம்
ஒவ்வொரு வீட்டுக்கும்
மீண்டும் குடிவருகிறது.

பின்னாலிருந்து
கண்களைப் பொத்தி
'கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்'
என்ற அனைகாவின்
பிஞ்சு விரல்களுக்கிடையே
இன்னும் இன்னும்
அழகாகத் தெரிந்தது
இந்த உலகம்.
--நாவிஷ் செந்தில்குமார்

Thursday, March 11, 2010

இந்த வாரம் ஆனந்தவிகடனின் எனது கவிதை

வாழ்வின் நீளம்
**********************
நூற்றியிருபது கேட்ட
கடைக்காரனிடம்
நூறு தருவதாகச் சொல்கிறான்
வாங்க வந்தவன்...
பேரம் படியாமையின் கணங்களில்
நீள்கிறது
கறிக்கோழி ஒன்றின்
வாழ்க்கை!

பறவையின் ஒலி
***************************
வீட்டுக் கதவு
திறந்து மூடும்போது
தவறாமல் ஒலிக்கிறது
அந்த மரத்தில்
எப்போதோ வாழ்ந்த
பறவையின்
'கி(ரீ)ச்... கி(ரீ)ச்' சத்தம்!

Thursday, February 25, 2010

ஆனந்த விகடனில் எனது கவிதை

ஏழு புன்னகைகளைக் கொடுத்து
இவைகளைச் செலவுசெய்தால்
உனக்கொரு பரிசு தருகிறேன்
என்றான் அவன்.

நாளிதழ் போடுகிற
கண்ணனிடம் ஒன்றைக் கொடுத்தேன்
அவனிடமிருந்த ஒன்றை
எனக்குக் கொடுத்தான்!

பள்ளிக்குச் சென்ற அனைகாவிடம்
இன்னொன்றைக் கொடுத்தேன்
அவளோ பதிலுக்கு
இரண்டைக் கொடுத்தாள்!

கொடுத்ததற்குப் பின்னாகப்
பெற்றவை
தாமாகக் கிடைத்தவை என
இருபத்திமூன்றாகியது கணக்கு

எவரால் கொடுக்கமுடியாதோ
அவர்களிடமே
இனி கொடுப்பது என
முடிவுசெய்தேன்...

எண்ணிக்கை குறையத் தொடங்கியது
யுக்தி வேலைசெய்வதால்
திரும்பத் திரும்ப
அவர்களிடமே கொடுத்தேன்!

வாங்கிப்பழகியவர்கள்
ஒரு நிலைக்குப்பின்
கொடுக்கப்பழகி
நிறையக் கொடுக்கத்தொடங்கினர்...

இருப்பை எண்ணுவது
சிரமமாக இருந்தது
பரிசு தருவதாகச் சொன்னவன்
முகம் மறந்தே போனது!

தோற்றுப்போவார்கள் என்பதால்
எதிர்படுகிறவர்களிடம்
ஆளுக்கு ஏழாகக் கொடுத்து
செலவுசெய்தால் பரிசு என்கிறேன்!

நன்றி : ஆனந்த விகடன்

Sunday, February 21, 2010

குடை பிடித்தவனைக் கொன்றுவிட்டார்கள்

வேளச்சேரி பாரதிநகரில்
கொலை நிகழ்வுகள்
அரங்கேறியிருக்கின்றன

கடந்த வாரத்தில்
நான் ஊரில் இல்லாத
சனி ஞாயிறு அன்று
தெரியாதவர்கள் உள்ளிட்ட
எனக்குப் பரிட்சயமான
நண்பர்களும்
சாகடிக்கப்பட்டிருக்கிறார்கள்

ரகுவின் கழுத்து
கைகால்களை அறுத்து
அப்படியே போட்டிருந்தார்கள்

பிரியங்காவை ஒரேயடியாகச்
சாய்த்திருந்தார்கள்

சிவாவின் உயிர் வாசனை
இன்னும் அடங்கியபாடில்லை

திவ்யாவின் சடலத்தை
ஒரு பழைய ஊர்தியில்
இன்று காலையில்தான்
ஏற்றினார்கள்...

குறிப்பு ஒன்று
மேலே சொன்ன
பெயர்கள் யாவும்
அவர்களின் இயற்பெயர் அல்ல
நான் அவர்களுக்குச்
சூட்டிய செல்லப்பெயர்கள்

குறிப்பு இரண்டு
இவர்கள்
மனிதன் என்பவருக்கு
மனிதன்
மரம் என்பவருக்கு
மரம்.

நன்றி : கீற்று.காம்

Friday, February 12, 2010

காதலுக்கு நல்லது

நிலவைப் பார்க்க
நீயும்
நட்சத்திரத்தைப் பார்க்க
நானும்
மொட்டைமாடிக்கு வந்த
ஓரிரவில்
காதல் நம்மைப் பார்த்தது!
00
நீ குடை கொண்டு
வந்தாய்
நான் காதல் கொண்டு
வந்தேன்
வானம் மழை கொண்டு
வந்தது
குடைக்குள் காதல் மழை
பொழிந்தது!
00
எல்லாவற்றையும் போல
நானும் உனக்கொரு
விளையாட்டுப் பொம்மையே
என்னவொன்று
இரவிலும் என்னைக்
கட்டியணைத்துக்கொண்டு
உறங்குவாய்
00
சின்னச் சின்ன
செல்லச்சண்டைகள்
காதலுக்கு நல்லது
அதுவே
ஜென்மப்பகைக்கு
காரணமாகிவிடாமல் இருப்பது
இன்னும் நல்லது.
00
குப்பைபோடப் போனபோது
போன வருடக்
காதலர்தினத்திற்கு
பரிமாறிக்கொள்ளப்பட்ட
வாழ்த்து அட்டை
குப்பைத்தொட்டியில் கிடந்தது
அந்தக் காதல்
எங்கே கிடக்கிறதோ?

நன்றி: கீற்று.காம்

Tuesday, February 9, 2010

காலம் தோறும் காதல் ஊறும்


இது எங்கள் அலுவலகத்திலுள்ள வலைப்பூவில், காதலர் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் போட்டிக்காக எழுதப்படும் தொடர்.
***********************************************************************************************************************
மலரிலிருந்து விதை உருவாகத் தொடங்கும்போது ஒவ்வொரு இதழாக உதிருவதைப் போல, இந்தப் பதிவை எழுதத் தொடங்கியதும் என் வயது ஒவ்வொன்றாகக் குறையத் தொடங்கியது. விட்டால் குழந்தையாகியிருப்பேன்... காதல் தான் என்னைத் தேக்கி வைத்திருக்கிறது. திருவிழாவிற்கு தேர் தயார் ஆவது போல, காதலைப் பற்றி எழுதுவதற்கு எனது ஒவ்வொரு செல்லும் தயாராகியது. ஊருக்குப் போவதற்கே எவ்வளவு ஆயத்தமாகிறோம். ஒரு உயிருக்குள் போவதைப் பற்றி எழுத எவ்வளவு மெனக்கெட வேண்டும்? காதலைப் பற்றிய சிந்தனைகள் என்னை அழகாக்கிவிட்டிருந்தன. சுற்றி நிகழ்ந்தவைகள் யாவையும் காதலாக மொழி பெயர்த்தேன். எல்லாம் காதலும் காதல் சார்ந்த இடமாகவே காட்சியளித்தன. காதல்...காதல்...காதல்...

இரண்டு குழந்தைகளிடம் க்ரீம் கேக்கை கொடுக்கின்றோம். ஒரு குழந்தை கிரீமை முதலில் சாப்பிட்டுவிடுகிறது. மற்றொரு குழந்தையோ கிரீம் இருக்கிற பகுதியை அடியில் வைத்துகொண்டு, சுவை குறைந்த கேக்கை முதலிலும் கிரீமை கடைசியிலும் உண்ணுகிறது. இப்போது இரண்டு குழந்தைகளிடமும் கேக்கின் சுவையை பற்றிக் கேட்டால் என்ன சொல்லும்? இப்படித்தான் நாமும் காதல் எனும் கேக்கையும் உண்ணுகிறோம். ஒரு பெண்ணை ஆணை நெருங்குவதற்கான வெறும் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தினோமேயானால், தேவை தீர்ந்ததும் காதலும் கசந்து விடும்.

விரைந்தோடும் ஆறு
தவறி விழுந்துவிட்ட
எறும்பு
பற்றிக்கொள்ளக் கிடைத்த
ஒற்றை இலை
காதல்…


காதலிக்காதவர்கள் என்று யாருமே இல்லை. ஏதாவதொரு தருணத்தில் எல்லோரும் காதலை உணர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அதில் சிலர் மட்டும் காதலை வெளிக்காட்டிக்கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள்.

அன்புக் களஞ்சியத்தில்
அடைத்து வைக்கப்பட்டிருக்கும்
அரியவகை உணவு
இரு இதயங்கள்
இரத்தம் பாய்ச்சி
மலரச் செய்யும்
மகோன்னத மலர்
ஒவ்வொரு உயிரும்
ஒளிவுமறைவாகவேணும்
வாசித்துவிட்டுச் செல்லும்
ஒற்றை வரி
காதல்.


இந்தப் பதிவை எழுத எனக்குத் தகுதி இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தபோது, காதலிப்பதற்கு தகுதியே தேவை இல்லை என்று தானே ஆண்டாண்டு காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு எழுத மட்டும் என்ன தகுதி வேண்டும்? நாம் எழுதலாமா என்ற கேள்வியைத் தூக்கியெறிந்துவிட்டு ஆரம்பித்துவிட்டேன். நீங்களும் படிக்கத் தொடங்குங்கள். ஒரு கை பார்க்கவேண்டாம். இரு கைகள் கொண்டு அணைத்திடுவோம், காதலை... ஒரு குழந்தை நம்மோடு கண்ணாமூச்சி ஆடுகிறபோது, பெரும்பாலும் அதன் இருப்பிடத்தை நாம் தெரிந்து வைத்திருப்போம். ஆனாலும் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியாதது போல் பாசாங்கு செய்துகொண்டிருப்போம். நேரம் ஆக ஆக குழந்தை குதூகலத்தின் எல்லைக்கே சென்று, பின் ஓடி வந்து நம் முதுகில் ஏறி அமர்ந்துகொண்டு நம்மை எள்ளி நகையாடுமே அதுவல்லவா சந்தோசம். அதுபோல காதலும் தன் ஒளிவிடம் விட்டு ஒருநாள் நம் இதயத்தில் ஏறிவந்து அமரத்தானே போகிறது!.. காத்திருத்தல் சுகமென காதல் தானே நமக்குப் பாடம் சொல்கிறது!

நீண்ட வரிசையில்
மிகப் பின்னால் நிற்கையில்
காத்திருப்பின் வலியை
நீடிக்கச் சொல்கிறது
மனசு
எனக்கு முன்னால்
நீ


நம்மில் பலர் முதல் சந்திப்பில் காட்டுகிற ஆர்வத்தை நூறாவது சந்திப்பில் காட்டுவதில்லை. அப்படியே ஆர்வமிருந்தாலும் அதை ஒரு சம்பிரதாயமாக, சாதனையாகக் கொண்டாட மட்டுமே செய்கிறோம். ஒரு விளையாட்டுப் போட்டியில் பங்குபெறுகிற பலரில் முதல் இரண்டு அல்லது மூன்று இடங்களைப் பிடிக்கிறவர்களை மட்டுமே கவனிக்கிறோம். காதலையும் அதே மனோபாவத்தில் அணுகலாமா? காதல் எல்லாவற்றையுமல்லவா கவனிக்கச் சொல்கிறது.

முதல்முறை சந்தித்தது போல
இப்போது நீ
இல்லவே இல்லை…
இன்னும் இன்னும்
அழகாகிக் கொண்டேயிருக்கிறாய்
எண்ணிக்கை கூடக் கூட
என்ன செய்வேன்
என்னன்பே…
கட்டுக்கடங்காத உன்
அழகை எந்தக்
கறுப்புப் பெட்டியில்
அடைப்பேன்?


பலருக்கு கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்துக் கொள்வதில் விருப்பம். அழகு கூடி இருக்கிறதா? குறைந்திருக்கிறதா? என்றெல்லாம் பார்ப்போம். அப்படி காதலைப் பார்க்கிறோமா? எத்தனை பேர் நம் காதல் கூடி இருக்கிறதா என்று சுய மதிப்பீடு செய்கிறோம்? நம் கவலையெல்லாம், புறம் சார்ந்தவையாகவே இருக்கின்றது. அதனால்தான், அகம் சார்ந்த காதலை புறம் சார்ந்து மதிப்பீடு செய்கிறோம். நிச்சயமற்ற தன்மையில் இருக்கும் வரை நம் துணையை மிக நேசிக்கிறோம். இனி நமக்குத்தான் என்றான பிறகு கண்டுகொள்ளவே மறுக்கிறோம். இந்த மனோபாவம் தானே பல காதல்களை திருமணத்திற்குப் பின் தோல்வியில் வீழ்த்தியிருக்கிறது. இடைவெளி அதிகமாக அதிகமாக காதல் குறைந்து போனவர்களையும் நாம் பார்க்கத்தானே செய்கிறோம்.

உரச உரச
தீப்பெட்டியையே
பற்ற வைக்கிற
தீக்குச்சி
நீ


காதல் ஒரு நாட்குறிப்பு. அதன் பல பக்கங்களை எழுதாமலே விட்டுவிடுகிறோம். தினம் தினம் எழுத வேண்டும். வெறும் மையால் அல்ல. பெண்மையை ஆண்மையால் எழுதுங்கள். ஆண்மையை பெண்மையால் எழுதுங்கள். தூய அன்பால், முத்தத்தால் எழுதுங்கள். பின்னொரு நாளில் நம் இளமைக்காதலைப் புரட்டிப் பார்க்கிறபோது வெறுமை என்ற ஒன்று காட்சியளிக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.


படங்கள் இல்லாத
பாடப்புத்தகத்தில்
நீ வந்து அமர்ந்து கொள்வதால்
புரட்டப் புரட்ட
படப் புத்தகமாகவே
காட்சியளிக்கிறது!


இனி மனம் முழுவதும் காதலை நிரப்பிக் கொண்டு காதல் வரிகளுக்குள் போவோமா. கவனமாகக் கடந்து செல்லுங்கள், இனி வரும் வரிகளை. எல்லாம் இதயம் சார்ந்தவை...

மின்காந்தஅலைகளை உமிழும்
அவளினிரு கண்களைத்
தவிர்க்கவேண்டி
தலை கவிழ்த்தேன்
பாதங்களில்
பத்துக்கண்கள் கொண்டு
வெறிக்கிறாள்


அவனும் அவளும் மழையை ரசிக்கிறார்கள். அவன் காகிதக் கப்பல் செய்து மழை நீரில் விடுகிறான். அவளோ தானும் அந்தக் கப்பலில் பயணம் செய்யவேண்டும் என்கிறாள். சரி நானும் கூட வருகிறேன் என்று இவன் சொல்கிறான். பிறகு தங்களையே சமாதானம் செய்துகொண்டவர்களாக, நாம் வேண்டாம் நம் காதலை அனுப்பலாம் என முடிவு செய்கிறார்கள். இருவரும் கரங்களை ஒன்று சேர்த்து கவனமாக அவர்கள் காதலை கப்பலில் வைத்து மிதக்கச் செய்கிறார்கள். மழைநீர் விழ விழ காகிதம் ஊறி ஒரு கட்டத்தில் மூழ்கிவிடுகிறது. அதைக் காணச் சகிக்காதவளாய் கவலை கொள்கிறாள். அவனோ, நம் காதலை சுமக்க முடியாமல் கப்பல் மூழ்கி விட்டது. நம் காதல் அவ்வளவு கனமானது என்கிறான். அவள் அவனது தோளில் சாய்ந்து கொள்கிறாள்... அவளது நெற்றியில் முத்தம் வைக்கிறான் அவன். அதுவரை அவளது புருவங்களுக்குக் கீழே உறைந்துகிடந்த காதல் ஆனந்தமாக உருகத் தொடங்குகிறது...

எல்லோரும்
காதலைக் கொண்டாடுகிற
வருடத்தின் இந்த ஒருநாளாவது
ஓய்வெடுக்க..லா..ம்… எனச்
சொல்லிக்கொண்டிருக்கும் போதே
உச்சி நெற்றியில் விழுந்தது
முத்தம்தான் என உணர்வதற்குள்
உதடுகளை உஷ்ணப்படுத்தியது
இன்னொரு முத்தம்.

நட்புடன்,
நாவிஷ் செந்தில்குமார்

Saturday, February 6, 2010

முடியாதவர்கள்

பூஞ்செடி கொடிகளை
அழகாக வெட்டி
நீர்பாய்ச்சி வளர்க்கும்
தோட்டக்காரனாக
00
ஆளில்லாதபோது
இரவுமுழுவதும் விழித்திருந்து
வீட்டைப் பாதுகாக்கிற
காவல்காரனாக
00
குவிந்து கிடக்கிற
துவைத்த ஆடைகளை
சலவை செய்துதருகிற
சலவைக்காரனாக
00
மளிகைச்சாமான்கள்
காய்கறிகள்
மாமிசம் வாங்குகிற
எடுபிடியாக
00
மலக்கறை படிந்த
கழிப்பறைக் கோப்பைகளை
தேய்த்துக் கழுவுகிற
கூலிக்காரனாக
00
குழந்தைகளைப்
பள்ளிக்கு அழைத்துபோகிற
பக்குவமாகப் பார்த்துக்கொள்கிற
ஆண் ஆயாவாக
00
உண்டு மிஞ்சியதைத்
தின்று வாழ்கிற
உயர்திணை நாயாகக்கூட
இருக்க முடிகிறது!
00
வயதான கிழவன்களால்
பெரும்பாலான வீடுகளில்
தாத்தாவாக
இருக்கவே முடிவதில்லை!
**************************************
எதிர்வீட்டுக் குழந்தை
வாழ்க்கைப்பாடம்
படிக்கிறது...
பப்பி - உயர்திணை
தாத்தா - அஃறிணை
--நாவிஷ் செந்தில்குமார்

நன்றி : கீற்று.காம்

Wednesday, February 3, 2010

பூங்கா இருக்கைகளும் சில காதலர்களும்

இயல்பாக இருந்தால்
தொடுவதற்கான சாத்தியங்கள்
அமையப்பெறாத
அவ்விரு பூங்கா இருக்கைகளும்
ஒன்றின்மீது மற்றொன்று
அளவில்லாத பிரியங்கள்
கொண்டவை...
00
காதலின்மீது
பெருமதிப்புடையதாய்
இருந்ததால்
ஸ்பரிசத்தின் மீதும்
ஆழ்ந்த ஈடுபாடுகொண்டு
மாலை நேரங்களில்
பெண்ணாகவும்
ஆணாகவும் மாறி
அளவளாவிக் கொண்டிருக்கும்!
00
பனிக்கால இரவுகளில்
பெருமரத்திலிருந்து
உதிரும் சருகுகள் ஆசிர்வதிக்க
அவை ஒன்றையொன்று
முத்தமிட்டுக்கொள்வது
காண்பதற்கினியது
00
எவனோ ஒருவனின்
சுயதேவைக்காக
எடுத்துச்செல்லப்பட்ட
ஒற்றை இருக்கையின்
இழப்பிற்குப்பின்
வாழ்வின் விளிம்பில் பயணிக்கிற
உறவுகளால் நிராகரிக்கப்பட்ட
மனிதர்களாகவே அவதரிக்கிறது
மற்றொரு இருக்கை.
--நாவிஷ் செந்தில்குமார்
நன்றி: கீற்று.காம்

Tuesday, February 2, 2010

சாலையைக் கடக்கும் குழந்தை

ஒரு குழந்தை
சாலையைக் கடக்க
உதவக் கோரினால்
சட்டென்று செயல்படாதீர்கள்!
00
சிறுமலரை
உள்ளங்கையில் வைத்து
விரல்களைக் குவித்து
மூடித்திறக்கையில்
இதழ்கள் கசங்கவில்லை
என்றால் மட்டுமே
அதன் கரங்களைப்பற்றுங்கள்!
00
கடக்கும்போது
எதிர்புறத்தை அடைவதில்
அவசரம் காட்டாதீர்கள்
வாகனத்தில் வருபவர்களையும்
காத்திருக்கச் சொல்லுங்கள்!
00
மறுமுனையை அடைந்ததும்
'இனி நீயாகப் போய்விடு'
என்று சொல்லி
கிளம்பிவிடாதீர்கள்
பள்ளிவரையோ
வீடுவரையோ அழைத்தால்
போய்வாருங்கள்...
00
அலுவலகத்திற்கு
நேரமாகிவிட்டதாகவோ
இதர வேலைகள் இருப்பதாகவோ
துளியும்
காட்டிக்கொள்ளாதீர்கள்
எவ்வளவு நேரமானாலும்
விடைபெறும் முடிவை
குழந்தையிடமே விட்டுவிடுங்கள்.
00
உங்கள் வயதை
அனுபவத்தை
முடியும்வரை குறைந்துவிடுங்கள்
உலகத் தொடர்பிலிருந்து
முற்றாகத் துண்டித்துக்கொள்ளுங்கள்
அதற்குத் தெரிந்த கதைகளை
அதன் மொழியில்
அப்படியே சொல்லவிடுங்கள்
இடையிடையே
'ம்ம்...ம்ம்...' எனச் சொல்லுங்கள்.
00
விண்மீன்கள்தான் தனக்கு
விளையாட்டுப்பொருட்கள்
எனச் சொன்னால்
உடைந்த அல்லது
பழையதாய் ஒன்றை
அதனிடமிருந்து
கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்!
00
சில முத்தங்களைக் கொடுத்தால்
எச்சிலைத் துடைத்துவிடாதீர்கள்
காய்வதற்குள் வீடுவந்து
நாட்குறிப்பில்
'சொர்க்கத்தைச் சுகித்த
தினம்' என மறக்காமல்
குறித்துவைத்துக்கொள்ளுங்கள்!

நன்றி : கீற்று.காம், உயிரோசை, ஆனந்த விகடன்

Friday, January 29, 2010

விசித்திரப் பறவை

இரண்டு மாதங்களுக்கு
முன்னொரு நாளிலிருந்து
எங்கள் வீட்டிலொரு
பறவை வசிக்கிறது
பகலில் தூங்கி
இரவில் விழிக்கிற
பறவை அது

பறக்கும்போது
சிக்கிப் பலியாகிவிடுமென்பதால்
காற்றாடியைப்
பயன்படுத்தமாட்டோம்
வழிதவறி
வெளியே சென்றுவிடுமென்று
கதவு ஜன்னல்களைக்
கவனமாகத் தாழிட்டுவிடுவோம்
அதன் எச்சம்
படுவதைத் தவிர்க்க
போர்வைக்குள் ஒளிந்துகொள்வோம்...

அலுவலகம் செல்ல
ஆறுமணிக்கு
எழுந்து குளிக்கிற நண்பன்
அதன் சேட்டைகளைப்பற்றி
நிறையச் சொல்வான்
நான் எழுகின்ற நேரத்தில்
நன்றாக
உறங்கத்தொடங்கிவிடும்
--நாவிஷ் செந்தில்குமார்

நன்றி : கீற்று.காம்

Monday, January 11, 2010

சகுனம்

கடினமான வேலை
கடிந்துகொண்ட மேலாளர்
எப்போதுமில்லாத
உடற்சோர்வு என
எதுவுமே சரியில்லை...
காரணமென்னவென யோசிக்கையில்
காலையில் குறுக்கே சென்ற
கறுப்புப் பூனை
கண் முன்னே வந்தது...
வீடு வந்ததும்
எதிர்வீட்டுப் பூனை
இறந்ததுபோனதென
அறைநண்பன் சொன்ன செய்தியால்
'காலையில் என் முகத்தில்தான்
முதலில் விழித்ததோ?' என்ற
கேள்வி எழுந்தது

நன்றி : கீற்று.காம்

Sunday, January 10, 2010

பயணம் சொல்லிப் போனவள்

கழுத்துக் கீழே ஒரு முத்தம்
இடுப்பினிரு பக்கமும்
இரு முத்தங்கள்
முகத்தில் மொத்தம் மூன்றென
முத்தம் வாங்கிப் போனாயடி…
மொத்தமாய்ப் போகத்தானடி?


பயணம் போவதாய்ச்
சொன்னாயடி - சொல்லாமல்
மயானம் போயிப்
படுத்தாயடி
பூக்கின்ற பூக்களெல்லாம்
கேட்குதடி - அதைச்
சூடும் கூந்தல் போன கதை
எப்படிச் சொல்வேனடி?


இடிக்கு அணைகின்ற
நீயின்றி
இரவில் கட்டில்
நனையுதடி…
கடந்தமுறை செய்தது
கடைசியென்றே தெரிந்திருந்தால்
கடித்து உன்னை
நானே தின்றிருப்பேன்


புழங்கிய வீட்டை
விற்றாலும்
போவேனா என்கிறது
உன் நினைப்படி….
உன்னுடன் வந்துவிடலாம்
என்றாலும்
உடன் விட்டுப்போனாயொரு
பரிசடி….
வாழ்ந்தாக வேண்டும்
நம் பிள்ளைக்காகவென
நினைக்கும் போதடி
உன் மார்பு குத்திய நெஞ்சு
இன்னும் வலிக்குதடி!


கணவனை இழந்தவள்
கைம்பெண் என்றால்
பெண்டிர் இழந்தவன்
பேரென்னடி?
என் வாழ்வானது மண்ணடி…

நன்றி : திண்ணை.காம்

Tuesday, January 5, 2010

உலக வெப்பமயமாதல் - (உரையாடல் கவிதைப்போட்டிக்கான கவிதை)

இருநூறு ஆண்டுகளுக்கு
முன்னர்
இங்கேயொரு
காடு இருந்தது
மலை இருந்தது
ஆறு இருந்தது
ஏரி இருந்தது...
பயிர்கள் வாட
உயிர்கள் வாடுமென்ற
பாடம் படித்தார்கள்!


இன்றோ
காடுகள்
அடுக்குமாடிவீடுகளாக
இருக்கின்றன
மலையில்
மல்டிநேஷனல் கம்பெனி
இருக்கிறது
ஆற்றில்
ஐந்து நட்சத்திர ஹோட்டல்
விளக்குகள் ஜொலிக்கின்றன
ஏரியில் எண்ணைக் கழிவில்
பாலித்தீன் பைகள்
மிதக்கின்றன...
செயற்கைக் குளிர்
இல்லையென்றால்
செத்துப்போவோமென்ற
சித்தாந்தம் ஒலிக்கிறது!

இவைகளில் ஒவ்வொன்றோடும்
இரண்டறக் கலந்துவிட்ட
நாமும் நிச்சயமாக
இருநூறு ஆண்டுகள்
கழித்து
இருக்கமாட்டோம்!

'இங்கே மனிதர்கள்
இருந்தார்கள்'
என்ற
கல்வெட்டைச் சுமக்கும்படி
காலத்தைப் பணித்தவர்கள்
பட்டியலில்
நமது பெயர் இருக்கும்!

அறிவில்லாதவர் கணக்கு

செருப்புப் போட மறுக்கும்
சிறுமியை
'இந்தக் காலத்தில்
இப்படி யாரும்

இருப்பார்களா?' என்றவாறே
கையில்

பேனாவைக் கொடுத்து
வீதியில் நிறுத்தி
'செருப்பில்லாமல் வருபவர்கள்
எண்ணிக்கையைக் குறித்து வை' என்றேன்...
சற்று நேரத்தில்

வந்து பார்த்தபோது
பாதையில்

பூஞ்செடியின் தளிர்களைக்
கிள்ளியெறிந்து கொண்டிருந்தவளை
'அறிவில்லை உனக்கு?'
எனத் திட்டிச் சென்றேன்...
அரைமணி நேரம் கழித்து வந்து
'ம்ம்.. எத்தனை பேர்?' என்றேன்
'இருபத்தாறு' என்றாள்
'அட, இவ்வளவா?' என்றேன்
'இது அறிவில்லாதவர்கள் எண்ணிக்கை' என்றாள்!

நன்றி : கீற்று.காம்

Sunday, January 3, 2010

நாய்கள் மொழி!

மனிதர்கள்
**************************************
கால்சட்டைப்பையில்
கற்களை நிரப்பிக்கொண்டு
காலையிலிருந்து அலைகிறான்
சிறுவன் ஒருவன்
குருவியைத்தேடி...
அவனது இலக்கு
பச்சோந்தியாக இருந்திருந்தால்
ஊரில் இழவுகள்
பல விழுந்திருக்கும்!

நாய்கள் மொழி!

**************************************
பசியென்று
சோறுகேட்டு வந்தவனிடம்
எதுவும் இல்லையென்று மட்டுமே
சொல்ல முடிந்தது
மனிதர்களால்...
வீதி நாய்கள் தான்
குரைத்துச் சொல்லின
'உன் அழுக்குச் சட்டை
கிழிந்திருக்கிறது' என
--நாவிஷ் செந்தில்குமார்

நன்றி : வார்ப்பு.காம்