Monday, December 28, 2009

கண்டதைச் சொல்லுகிறேன்

இருவருக்கிடையேயான
வாள்வீச்சு
காயமின்றி முடிந்ததெனச்
சொல்கிறார்கள்...
பிரபஞ்சத்தின் வெளிகள்
வெட்டப்பட்டு
வழிந்துகொண்டிருக்கிறது
இரத்தம்

தன்னையுரசிச் சென்ற
பசுமாட்டை
'எருமைமாடு' எனத்
திட்டியவனைப் பார்த்து
'ம்ம்ம்ர்ரூ' என்றவாறு
நகர்ந்தது மாடு...
அவ்வார்த்தையை
குருடனென மொழிபெயர்த்தேன்

அடுக்குமாடி குடியிருப்பில்
விரகதாபத்தைக்
கொத்தித்தின்கின்றன
அருகிலுள்ள வீடுகளின்
கலவிச்சப்தங்கள்...
விரிசலடைகின்றன
விதவையொருத்தியின்
படுக்கையறைச்சுவர்கள்

நூற்றியிருபது கேட்ட
கடைக்காரனிடம்
நூறு தருவதாகச் சொல்கிறான்
வாங்க வந்தவன்...
பேரம்படியாமையின் கணங்களில்
நீள்கிறது
கறிக்கோழியொன்றின்
வாழ்க்கை

பெண்ணொருத்தியின்
ஜாக்கெட்டிலிருந்த
ஜன்னலின் வடிவம்
இந்திய வரைபடம்போலிருந்தது...
தமிழகமிருக்கிற
பகுதியிலிருந்த மச்சத்தை
சென்னையெனக் குறித்ததும்
மீள்கிறது பார்வை
நன்றி : உயிரோசை.காம் மற்றும் திண்ணை.காம்

கூடல்பொழுதில் கசியும் கானல்நீர்

இரட்டைக்குழந்தைகள்
ஆணொன்று
பெண்ணொன்றுமாய்
வேண்டுமென்கிறாள்
வெற்றுமார்பில்
விரல் நகர்த்திக் கோலமிடும்
மனைவி
00
இருந்தால் ஆபத்தென்பதால்
குடல்வால்
அறுவைச்சிகிச்சையெனச் சொல்லி
கர்ப்பப்பையை
அகற்றிவிட்ட கதை
அறியாதவளிடம்
'சரி'யெனச் சமாளிக்கிறான்
கணவன்
00
வெறுமை பரவிய
படுக்கையறையில்
ஏதுமறியாதவளின்
கனவுகள் விரிய
எதார்த்தம் தெரிந்துகொண்டவனின்
கண்களில் குருதி வழிய
இனிவரும் இரவுகளில்
அவளது ஆண்மை
இவனைப் புணரும்
இவனது பெண்மை
கருவுற்ற நெஞ்சிலே
குழந்தையைச் சுமக்கும்!

நன்றி : திண்ணை.காம்

Thursday, December 24, 2009

நடைவண்டி

01.
நடைவண்டி
-----------------
அண்ணனுக்குப் பிறகு அக்காவை
அவளுக்குப் பிறகு என்னையும்
நடக்க வைத்ததை
அண்ணனின் பிள்ளைக்குதவுமென
வைத்திருந்தாள் அம்மா...
அவனோ
புதியதாய் ஒன்றை வாங்கிவிட
யாருக்கும் தெரியாமல் ஒருநாள்
விறகாக்கிவிட்டாள் அண்ணி!
யாரேனும் இப்போது
ஏற்றிவிட்ட ஏணி பற்றிப் பேசினால்
நடக்க உதவிய நடைவண்டி
நினைவுக்கு வருகிறது...


02.
மனைவி பற்றிய கவிதைகள்
-------------------------------------
நாய் பற்றிய
கவிதையைப் படிக்கிறபோது
எனக்குப் பிடித்த மாதிரியாக
நாயொன்றை
உருவகப்படுத்திக்கொள்கிறேன்...
இவ்வாறே பிற
கவிதைகளை வாசிக்கிற போதும்
அவையொத்த பிம்பம்
மனவெளியில்
மிதந்து செல்கிறது
'இந்தச் சாயல்
இன்னொருவன் மனைவியுடையதாக
இருக்கக் கூடுமோ?'
என்ற கேள்வியால்
மனது லயிப்பதில்லை
மனைவி பற்றிய கவிதைகளில்...

நன்றி : வார்ப்பு.காம்

Wednesday, December 23, 2009

முன்னாள் சிநேகிதிகள்

போன வருடம்
பூங்கொத்துடன் வாழ்த்துச் சொன்ன
தோழி ஒருத்திக்கு
இந்தப் பிறந்தநாளில்
இருக்கேனா? செத்தேனா?
எனத் தெரியவில்லை...

அடுத்த கவிதைத் தொகுப்பின்
முதல் பிரதி தனக்கே
வேண்டுமெனச் சொன்ன
முப்பது தோழிகளும்
முகவரியைத் தொலைத்திருந்தார்கள்...

மூன்று வேளைகளும்
'சாப்பிட்டாயா?' என
குறுந்தகவலில் குடைச்சல் தந்த
தோழியின் அலைபேசிக்கு
அழைக்கிற போதெல்லாம்
அணைத்துவைக்கப்பட்டிருப்பதாகச்
சொல்லப்படுகிறது...

என் மகளை தன் மகனுக்குக்
கேட்பேன் எனச் சொன்ன
தோழியொருத்தி
அவள் திருமணத்திற்கே என்னை
அழைக்கவில்லை!

திருமணத்திற்குப் பிறகு
தற்செயலாகச் சந்தித்த
தருணமொன்றில் தோழியொருத்தியிடம்
கோபித்துக் கொண்டேன்...
அவளோ
'அவர் சரி, அத்தை மாமாவிடம்
சிநேகிதனொருவன் இருந்தானென
எப்படிச் சொல்வது?' என்றாள்...
இருந்தானில் இறந்து போயிருந்தது
எங்கள் நட்பு!

இரு மனங்களை இணைப்பதாகச்
சொல்கிற திருமணம்
எத்தனை எத்தனை
நட்பின் இதயங்களைப்
பிரிக்கிறதோ?

பெண்களை நம்புகிற
நட்பையும் நம்புகிற என்னால்
இப்போதெல்லாம்
இன்னொரு ஆணால்
தீர்மானிக்கப்படுகிற
பெண்களுடைய நட்பை
நம்ப முடியவில்லை!

ஏதோ உறுத்த முதன்முதலாக
மனைவியிடம் கேட்டேன்...
'நீயாவது சிநேகிதர்களுடன்
தொடர்பில் இருக்கிறாயா?'
அவள் விடுத்த பெருமூச்சு
தன் கொடிய வெப்பத்தால்
நானறிந்த மொழியொன்றில்
பெண்களின் வாழ்க்கையை
எழுத முயன்று
மூலையைத் தேடி முடங்கியது...
நன்றி : திண்ணை.காம்

Monday, December 14, 2009

விநாயகமுருகனின் "கோவில் மிருகம்" கவிதைத் தொகுப்பு

வலைப்பூ வந்த பிறகு, தனியொரு மனிதனின் ரசனைக்குட்பட்ட கரிசனத்திற்காகக் காத்திருக்கும் காலம் போயே போய்விட்டது. எண்ணத்தைக் கடைக்கோடி வாசகனுக்குக் கொண்டு போவதற்குப் போடப்பட்டிருந்த கனத்த பூட்டு உடைக்கப்பட்டுள்ளது. எனவேதான் , இணையமென்னும் பெருவெளியில் பற்றிப் படர்ந்து கிடக்கின்றன ஏராளமான கவிதைகள். அப்படி எழுதிவந்த விநாயக முருகனுக்குள்ளே முகிழ்த்திருக்கிறது, தன் கவிதைகளைத் தொகுத்துப் புத்தகமாகத் தரவேண்டுமென்ற எண்ணம். அதன் விளைவுதான், இந்தக் "கோவில் மிருகம்" என்னும் கவிதைத் தொகுப்பு.
வலைப்பூவை வாசிக்கிற வாசகனின் மனநிலையும், கவிதைத் தொகுப்பை வாசிக்கிற வாசகனுடைய மனநிலையும் வெவ்வேறான அலைவரிசையிலிருக்கும். அவர்களின் நாடி பிடித்தறிகின்றவன் வெற்றி பெறுகிறான். அந்த வித்தை விநாயக முருகனுக்கு கை வந்த கலையாய் இருக்கிறது. ஒரு தொகுப்பின் கடைசிப் பக்கம் வரை அழைத்துச் செல்கிற அபார சக்தியை முதல் நான்கு அல்லது ஐந்து கவிதைகள் பெற்றிருக்க வேண்டும். இல்லையேல், நல்ல கவிதைகள் கூட நிராகரிக்கப் படுகின்ற அபாயமிருக்கிறது.

அந்தப் பணியை விநாயக முருகனின் ஆரம்பக் கவிதைகள் செம்மையாய்ச் செய்திருக்கின்றன. மனிதகுலத்தின் ஆளுமையின் கீழ் மரித்துப் போன பிற உயிர்களின் சுதந்திரத்தை, "மீன் தொட்டிகள்" என்ற கவிதையின் மூலம் பேசுகிறார். கோல்டன் மீன் அழகென்று வளர்க்கின்றவன் வீட்டுக் குழம்பில் குளத்து மீன் கு(கொ)திக்கிற உண்மை இந்தக் கவிதையில் விளங்குகிறது. பிற உயிர்கள் மீது காட்டும் பிரியம், கருணை எல்லாம் இவர்கள் போடும் ஒரு விதப் பிச்சை.
மீன் தொட்டியின் விபரங்களை விளக்கிக் கொண்டே வருகிற கவிதையை, இப்படி முடிக்கிறார்.
"எல்லாம் சரி
மீன்களுக்கும் இந்தத் தொட்டி
பிடிக்குமென்று சொன்னதுதான்
எனக்குக் குழம்புகிறது"


ரிமைன்டர் வைத்து பிறந்தநாள் வாழ்த்துச் சொல்கிற கலாச்சாரச் சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதை, எந்திரத்தனமான வாழ்க்கைமுறையை
"இரண்டு கைகளைக் கூப்பி
தலையை லேசாகக் குனிந்து
புன்னகையோடு வரவேற்ற
பெண்ணொருத்தி
பொம்மையென்று
சற்று தாமதித்தே
உணர முடிந்தது"

என்ற கவிதை மூலம் உணர்த்துகிறார்.

பாட்டியின் இறப்பைப் பற்றிய கவிதையில், கூட்டுக் குடும்பங்கள் சிதைந்துவிட்ட நிலையில் பெரியவர்கள் இருந்தாலும் இறந்தாலும் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை மறைமுகமாகக் கூறுகிறார். கடமையைக் கூடச் சுமையாக நினைக்கிற முகமூடி மனிதர்களுக்கென சில கேள்விகளை வைத்திருக்கிற "விடுமுறை" என்ற இந்தக் கவிதை
"பத்து மணி நேரத்தில் முடிந்தது
அடுத்த நாள் திங்கட் கிழமை
அலுவலக தினம்
அதிகம் சிரமம் தரவில்லை பாட்டி"

என முடிகிறது.

ஆண் பெண் நட்பு சகசமாகிப் போன நிகழ்காலக் கட்டத்தில், இயற்கை உபாதை பற்றிக் குறிப்பிட இன்னொரு சொல்லின் தேவை இருக்கிற சங்கடத்தை "மகளிர் மட்டும்" என்ற கவிதை பாடுகிறது. மேலும் மாதவிடாய் தருணத்தில் இருக்கிற பெண்ணொருத்தி வலியின் கொடுமையால் ஏதோவொரு வார்த்தை சொல்லிவிட, அலுவலகத்தில் சக ஊழியன் அவளை "சிடு மூஞ்சி" என எளிமையாய்ப் பெயர் வைத்துவிடுகிற கொடுமையின் உச்சத்தை உணர்த்துகிறது.

கவிதைத் தொகுப்பின் தலைப்புக் கவிதை, எல்லாச் செயலுக்கும் எதிர்வினையுண்டு என்ற நிதர்சனம் அறியாமல், அதிகாரம் செய்கின்ற வர்க்கத்தைச் சாடுகிறது.
"காட்டுப்பாகனொருவன்
நம்பி உறங்குவது
கோவில் மிருகத்தின்
காலடி நிழலில்"

பூமியின் காலடியில் எந்த நம்பிக்கையில் உறங்கிக் கொண்டிருக்கிறோம்? என்ன செய்யக் காத்திருக்கிறது நம்மை?

அன்றாட வாழ்வில் ஆங்காங்கே கொட்டிக்கிடக்கிற நிகழ்வுகளைக் கவிதையாக்கித் தொகுத்திருக்கிறார். வாசகர்களை வாசகர்களாகவே விட்டுவிடாமல், அவர்களும் கவிதை எழுதலாம் என்ற தோழமை உணர்வை உண்டு செய்கின்றது ஒவ்வொரு கவிதையும். கவிதைகளைப் படித்து முடித்தபின் கனமான பின்அட்டையை கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையே வைத்து கசக்கி, இனி பக்கங்களேதுமில்லை என்று அறிகிறபோது, இன்னும் சில பக்கக் கவிதைகளைத் தந்திருக்கக் கூடாதா? என்ற ஏக்கம் தோன்றுவது இவருக்கும், இந்தக் கவிதைத் தொகுப்பிற்கும் கிடைத்த வெற்றி!
முடிவற்றுச் சுழலும் காலச்சக்கரத்தில் குறிப்பிடத்தக்க ஆரங்களாய் விளங்கும் கவிஞர்களோடு, தனது கவிதைத் தொகுப்பின் மூலம் தன்னையும் இணைத்துக் கொள்கிறார். வினய்க்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
நட்புடன்,
நாவிஷ் செந்தில்குமார்.

Thursday, September 3, 2009

அப்பா

அப்பா...
வாழ்க்கை தந்த
உன் பெருமையை
எந்தக் கவிதையால்
சொல்லிவிட முடியும்?

உழைத்துக் களைத்த
உன் கை கால்களை
மிதிக்கச் சொல்வாய்...
அறியாத வயதில்
மிதித்ததை நினைத்து
இதயம் வலிக்குதப்பா!
இப்போதென்றால்
முத்தம் வைத்திருப்பேன்!

நீ அதிகம் கற்றதில்லை
என்பதாலே
கணக்குத் தெரியாதவனாய்
இருந்தாயோ?
எனக்குக் காசு கொடுக்கும்
போதெல்லாம்...

உனக்கு ஆடை வாங்கும்போது
விலையைப் பார்ப்பாய்!
எனக்கு மட்டும்
தரத்தைப் பார்ப்பாய்...

நீ வியர்வையில் எழுதிய
என் தலையெழுத்து
இன்று
குளிர்சாதன அறையில்
குளிரில் நடுங்குதப்பா!

என்னுடைய
வெற்றிகளுக்குப் பின்னால்
நீ இருக்கிறாய்!
தோல்விகளுக்குப் பின்னால்
உன் தோள் இருக்கிறது!

எனக்காக வாழ்கின்ற உனக்கு
எது வேண்டுமானாலும்
வாங்கித்தருவேன்!
செருப்பைத் தவிர...
காலமெல்லாம் உன்
கால்களுக்குச் செருப்பாக
நானேயிருப்பேன் அப்பா!

Friday, July 31, 2009

நண்பன்!

"சாப்பிட்டேன்" என
அம்மாவிடமும்
"கவலைப்பட வில்லை" என
அப்பாவிடமும்
"அடுத்த மாதத்திற்குள்
வேலை வாங்கிவிடுவேன்" என
அண்ணனிடமும்
"முதல் மாதச் சம்பளத்தில்
உனக்கொரு மடிக்கணினி" என
தங்கையிடமும் சொல்ல முடிந்தது...

"காலையிலிருந்து சாப்பிடல…
ரொம்பப் பசிக்குதுடா,
எதாவது வாங்கிக்கொடு"
என நண்பனிடம்
மட்டும் தான் கேட்க முடிந்தது...
--நாவிஷ் செந்தில்குமார்

Saturday, May 23, 2009

பூச்சியங்களுக்கு மதிப்பில்லை!

50
500 ஆகி - பின்
5000 என்றாகி,
50000 என
ஏறிக்கொண்டே போகிறது
ஈழத்தில்
இறந்த உயிர்களின்
எண்ணிக்கை!

இலக்கங்கள் கூடியும்
இரக்கமில்லையா
வல்லரசுகளே?

இடப்பக்கம் மட்டுமல்ல
ஈழத்தமிழன் என்றால்
வலப்பக்கம் வந்தாலும்
பூச்சியங்களுக்கு
மதிப்பில்லையோ?

Tuesday, April 7, 2009

பாட்டி இல்லாத வீடு

பாட்டி பாக்கு இடிக்கும்
சத்தமே - எங்களுக்கு
அதிகாலை எழுப்பும் மணி!

அப்பா அடிக்க
வரும்போதெல்லாம்
பாட்டியே எனக்குப்
பாதுகாப்பு வளையம்!

கண்ணாடி விளக்கோடு
காலைவரை
காவல் செய்வாள்
கன்றையும் மாட்டையும்!

ஆடு கோழி கூட
அவள் சொல்படிதான் நடக்கும்!
பள்ளிக்கே போகாதவள் அறிந்த
பாஷைகளோ பல...

கால்மேல் கால் போட்டு
யார் இருக்கக் கண்டாலும்
நினைத்துக் கொள்வேன்...
"அன்போடு கண்டிக்க
அவர்களுக்கு ஒரு
பாட்டி இல்லையோ?" என்று

திருநீறு பூசி உச்சி முகர்ந்து
சிறுபிள்ளையாய்
கையசைக்கும் பாட்டி
தாத்தா சாவிற்குப்பின்
நான் ஊருக்குக் கிளம்பும்
வேளைகளில்
எதிரே வராததில் இருக்கிறது
அவளது அறியாமையும்!
என் மேலுள்ள
அளவற்ற அக்கறையும்!

பாட்டியின் ஆசையே
என் திருமணத்தைப்
பார்ப்பதும்
பின் இறப்பதும் தான்!
காரணம் கேட்டால்
"செத்தால்தான்
உனக்குப் புள்ளையாகப்
பொறக்க முடியும்"
என்பாள் அந்த மகராசி!

கால ஓட்டத்தில்
இல்லாமல் போனது
மண்பானை சமையல்
மக்காச்சோளக்கூழ்
மரக்குதிர் மட்டுமல்ல!
தன் கைவைத்தியத்தால்
பல நோய்களை
எங்கள் வீட்டுப் பக்கமே
வராமல் செய்த
என் பாட்டியும்தான்!

பாட்டி கொடுத்த கசாயம்
அன்று கசந்தது
ஏனோ இன்று
இனிக்கிறது!

இப்போதெல்லாம்
அடிக்க ஓங்குகின்ற அப்பா
அழுதே விடுகின்றார்
தடுக்க வராத
தாயை நினைத்து...

தாத்தா பாட்டி இல்லாத வீடு
இக்காலப் பெற்றோருக்கு
வேண்டுமானால்
சுதந்திரமாய் இருக்கும்!
ஒருபோதும்
(பேரப்)பிள்ளைகளுக்கு
சொர்க்கமாய் இருக்காது!

Wednesday, April 1, 2009

குறைந்துபோன தாத்தா கவிதைகள்

இன்றோடு தாத்தா
இறந்து ஆண்டு
இரண்டாகிப் போனது!
கோயில் திருவிழாவில்
தாத்தாவின் தடந்தோளில்
பவனி வந்த நினைவு
இன்றும் பசுமையாய்…

தாத்தா இருந்தவரை
சாப்பாட்டு மீனில்
முள் இருப்பதே
தெரியாது எனக்கு!

இருநூறு கிலோ எடை விறகு
இருபது மைல்கள் தூரம்
அறுபது வயதில்
மனிதர் தினமும்
மிதிவண்டியில்
ஏற்றி வரும் கதை
இரண்டொரு மாடிக்கே
மின்தூக்கிக்காக காத்திருக்கும்
எனைப் போன்ற இளைஞனுக்கு
எப்போது போய்ச் சேரும்?

ஜல்லிக்கட்டு மாடு கிழித்த
தாத்தாவின் மார்புத் தழும்புதான்
ஏழு வயதிலேயே எனக்கு
மீசை வரைந்தது!

தாத்தாவின் இருமலில்
இசையை உணர்ந்தோம்!
அவர் மட்டும்
இரைச்சலாய் உணர்ந்தார்!
நாங்கள் தூக்கம் தொலைத்ததாக
நினைத்து
உயிர் தொலைத்தார்!

அவர் விரல் பிடித்து
நடந்த குழந்தை கவிஞனானது!
மனிதர் விட்டுச் சென்ற
வெற்றிடம் மட்டும்
நிரப்பப்படாமல்
வெறுமையாய்க் கிடக்குது.

பெருகிப்போன
முதியோர் இல்லங்களால்
குறைந்து போனது
குழந்தைகளின்
தாத்தாக்கள் மட்டுமல்ல!
தாத்தா கவிதையும்தான்!

Monday, March 30, 2009

குடித்த அப்பா... குடிகாத்த அம்மா!

"அடியே" என்று தொடங்கும்
அப்பாவின் அழைப்பொலியிலிருந்து
அம்மாவிற்கான
அடுத்த யுத்தம்
தொடங்கிவிடும்...

சாராய நாக்கிற்கு
சாதரண உப்பும் காரமும்
பத்தவே பத்தாது...
எப்படிச் செய்தாலும்
இல்லை ருசியென்று
காரணத்தோடு அடித்த அப்பா
இப்போதெல்லாம்
காரணமின்றியும்
அடிக்கத் தொடங்கிவிட்டார்

எனக்காக
புத்தாடை கேட்கையில்
அப்பாவின்
நாக்கு கூசச் செய்யும்
பதிலால்
அம்மாவின் துன்புற்ற இதயம்
தூண்டில் புழுவாய்
துடிதுடித்துப் போகும்

நான் கால்சட்டை நனைத்த
இரவுகளை விட
அம்மாவின் கண்ணீரில்
நனைந்த இரவுகள்
ஆயிரம்

வீட்டையே விட்டு
வெளியே வராதவள்
அம்மா
எப்படியோ அவள்
சுதந்திரம் மட்டும்
களவு போனது...

தனக்கென ஒரு ஆசையும்
வைத்துக் கொள்ளாத
கற்காலத் தாய்
"உனக்கென வருபவளுக்கு
ஒரு குறையும் வைக்காதே"
எனச் சொல்லும் பொது
முற்போக்குத் தாய்

எதற்குப் பிறந்தாள்
என்ன சுகம் கண்டாள்
வாழ்கையில் இவள்?
என்ற கேள்விகளுக்கு
இதுவரை விடையில்லை...
மஞ்சள் கயிறால்
வென்றவர் அப்பா
தோற்றுப் போனவளும்
பிள்ளைக்காகவே
தோல்வியை மெல்லிய
தோளில் சுமப்பவளும்
அம்மா!

Thursday, March 19, 2009

தேர்தல் கூத்து

வெள்ளந்திகள் போல
பச்சோந்திகள் பல
நடமாடும் காலம்...
துண்டைப்பார்த்து
துளியும் ஏமாற வேண்டாம்!
வண்ணங்கள் வேறானாலும்
அவர்கள் தம்
எண்ணங்கள் ஒன்றேதான்!

கூட்டணி சேர்ப்பில்
கொட்டியிரைக்கப்படும் பணம்
கொடுத்துச் சிவந்த
வாங்கிப் பழுத்த
கரங்கள் குலுக்கிக்
கொண்டிருக்கும்
வண்ணச்சுவரொட்டிகள்
இனி
வழி நெடுகிலும்...

தொகுதிப் பங்கீட்டிலிருந்து
தொடங்கிவிடும்
குழாயடிச் சண்டை...
விளக்கெண்ணை விட்டு
விழிகளைத் தயார் செய்யுங்கள்
காணவேண்டியிருக்கும்
ஏராளமான அவலங்களை...

யாகம் வளர்க்கின்றனர்
அரசியல்வாதிகள்
தூபம் போடுவார்கள்
தீயிறங்க...
தகுதியில்லாதவனுக்கு
வரமாய்ப் போகின்ற
வாக்குதான்
உங்களுக்குச் சாபமாய்
விழுகின்றது!

இலவசங்களுக்கு
இரையாகிப் போகாதீர்கள்!
தாயன்பு தவிர்த்து
ஏனைய இலவசங்களுக்கு
இங்குண்டு
ஏதேனும் ஒரு
மிகப்பெரிய விலை!

மௌனங்கள்
கோர்த்துக் கோர்த்து
மாலையாக்கியது போதும் - அது
அப்பாவிகளின் வாழ்க்கையை
அலங்கரிக்காது ஒருபோதும்.

அடுத்தமுறை தவறு செய்ய
யோசிக்கும்
அடிவாங்கும் மாடு - இதை
அறியாது போனால் நாம்
அதனிலும் கேடு.

இந்த முறை தருவோம்
சரியான சவுக்கடி
இதைச் சொல்லவேண்டும்
உங்கள் மனம் அடிக்கடி...

Tuesday, March 10, 2009

யார் சொன்னது?

யார் சொன்னது
தன் வினை
தன்னைச் சுடும் என்று?
பொறுப்பில்லாதவன்
புகைத்த பின்
அணைக்காமல் போட்ட
வெண் சுருட்டு
செருப்பில்லாதவன்
காலையல்லவா சுட்டது!

யார் சொன்னது
குடி குடியைக் கெடுக்குமென்று?
குடி போதையில் ஒருவன்
பள்ளிச் சிறுமியைக்
கெடுத்தான் என்று
நாளிதழ் ஒன்று
செய்தி சொன்னது!

யார் சொன்னது
மது வீட்டுக்கு
நாட்டுக்கு உயிருக்கும்
கேடு என்று?
ஆதாயம் இல்லாமலா
அரசாங்கமே
விற்பனை செய்யுது?
–நாவிஷ் செந்தில்குமார்

Saturday, January 17, 2009

ஒரு தாயின் கடிதம்

பேர் சொல்ல நான் பெத்தவனே
பெரிய படிப்பெல்லாம் முடிச்சு
வேலை தேடப் போனவனே!
நீ போயி மாசமென்னமோ
எட்டுதான் ஆச்சு
எனக்கு அது
மகாமகமா கழிஞ்சாச்சு!
ஓலையில எழுதும்படி
ஒண்ணுமேயில்ல
ஒன் நெனப்புனால மட்டுந்தான்
எழுதுறேம் புள்ள

பசு மாடு நேத்துதானே
கன்னு போட்டுச்சு!
சீம்பால பீச்சிறப்ப
ஒன் நெனப்பு வந்து
கண்ண கசக்குச்சு
மேட்டுக் காட்டுல சோள கருது
நல்லா வெளஞ்சுச்சு
கம்மாயில தண்ணி இல்லாம
சருகா பட்டிடுச்சு

உனக்கான அத்தமவ
பரிமளத்துக்கு தேதி குறிச்சாச்சு
அரசாங்க உத்தியோக மாப்புள்ள
அவங்க மனச மாத்திபுடுச்சு
எலித்தொல்ல நம்ம வீட்ல
இப்ப இல்லவே இல்ல
வயித்துப் பசி போக்க
அவை எல்லாம் நம்ம வீட்டு
அடுப்புல வேகுதுல்ல

மூத்தவளுக்கு வரன் கேட்டு
தரகர் வந்தாரு
கொழுத்த சொத்துள்ள
எடமுன்னு சேதி சொன்னாரு
என்ன ஒண்ணு
ரெண்டாம்தாரமாத்தான்
வாக்கப்பட வேணுமுன்னாரு
வறுமையும் அவ வயசும்
சரின்னு சொல்ல வைச்சிடுச்சு
சின்னவ வாங்கின மார்க்கு
தொள்ளாயிரத்து மூணு
'என்ன கல்லூரியில சேத்து விடு' ன்னு
பாடாப் படுத்துறா நின்னு
ஒப்பனுக்கு குடிப்பழக்கம்
இப்ப இல்ல கண்ணு
எப்படி சொல்வேன்
வித்துக் குடிக்க ஒண்ணுமில்லேன்னு
நிப்பாட்டிட்டாகன்னு

இது கேட்டு நீ ஒண்ணும்
வருத்தப்பட வேணாங்கன்ணு
லட்சியத்தில் நீ ஜெயிக்கணும்
நெலயாய் நின்னு
வெதநெல்ல வித்து பணம்
அனுப்பி வச்சிருக்கேன்
வாங்கி நீ வேளைக்கு சாப்புடு
தோதுபாத்து செலவு செஞ்சு
நாளக் கடத்திடு
தீர்ந்துபோனா கடுதாசி போடு
தாலிமணி வச்சிருக்கேன்
வித்தனுப்பறேன்

தவறான எண்ணம் வேண்டாம்
தளராத தன்னம்பிக்கையால
நம் தலைமொறையின்
தலையெழுத்த மாத்தி எழுது!

செத்தேன்னு சேதி வந்தா
கொஞ்சம் அழுவு
பொறகு எல்லாமே சகசமுன்னு
மொகத்த கழுவு
வேல ஒண்ணு கெடச்சவுடனே
ஓடி வந்து ஏஞ் சமாதியில
சாஞ்சுபடு
அந்த சந்தோசச் சேதிய
என் காதுல சத்தம் போடு...

--நாவிஷ் செந்தில்குமார்

Thursday, January 15, 2009

காட்சிகள் இரண்டு தோற்றம் ஒன்று

இரு சக்கர வாகனத்தில்
பச்சை விளக்குக்கான
காத்திருப்பில்
நீலப்படம் ஒன்று...
காது கடிக்கும் இதழ்கள்
மார்பு சுமக்கும் தோள்
முன்னிடை கீழ்ப் பிடிக்கும் கைகள்...
வேண்டாம் இவர்கள்
காதல் மிச்சம்
சொன்னால்
விழுந்ததாய் உணர்வீர்
காக்கை எச்சம்.
***********************************************
சாலையோரப்
பெருமரமொன்றினருகில்
பின்னிருகால்கள் பரப்பி
ஏதுவாய் நின்றது
ஒரு நாய்
எம்பிப் புணர்ந்தது
இன்னொரு நாய்.

--நாவிஷ் செந்தில்குமார்