Wednesday, April 1, 2009

குறைந்துபோன தாத்தா கவிதைகள்

இன்றோடு தாத்தா
இறந்து ஆண்டு
இரண்டாகிப் போனது!
கோயில் திருவிழாவில்
தாத்தாவின் தடந்தோளில்
பவனி வந்த நினைவு
இன்றும் பசுமையாய்…

தாத்தா இருந்தவரை
சாப்பாட்டு மீனில்
முள் இருப்பதே
தெரியாது எனக்கு!

இருநூறு கிலோ எடை விறகு
இருபது மைல்கள் தூரம்
அறுபது வயதில்
மனிதர் தினமும்
மிதிவண்டியில்
ஏற்றி வரும் கதை
இரண்டொரு மாடிக்கே
மின்தூக்கிக்காக காத்திருக்கும்
எனைப் போன்ற இளைஞனுக்கு
எப்போது போய்ச் சேரும்?

ஜல்லிக்கட்டு மாடு கிழித்த
தாத்தாவின் மார்புத் தழும்புதான்
ஏழு வயதிலேயே எனக்கு
மீசை வரைந்தது!

தாத்தாவின் இருமலில்
இசையை உணர்ந்தோம்!
அவர் மட்டும்
இரைச்சலாய் உணர்ந்தார்!
நாங்கள் தூக்கம் தொலைத்ததாக
நினைத்து
உயிர் தொலைத்தார்!

அவர் விரல் பிடித்து
நடந்த குழந்தை கவிஞனானது!
மனிதர் விட்டுச் சென்ற
வெற்றிடம் மட்டும்
நிரப்பப்படாமல்
வெறுமையாய்க் கிடக்குது.

பெருகிப்போன
முதியோர் இல்லங்களால்
குறைந்து போனது
குழந்தைகளின்
தாத்தாக்கள் மட்டுமல்ல!
தாத்தா கவிதையும்தான்!

No comments: