Wednesday, December 10, 2008

டிசம்பர் - 11 - இன்று பாரதி பிறக்கும் நாள்

இடிகொட்டும் இரவில்
கருத்தரித்தவனே
கதிரவனும்
உனைக்கண்டுதானடா
கதிர் தரித்தது!

செப்டம்பர் - 11
இரட்டைக் கோபுரம்
இடிந்த தினம்
மட்டுமல்ல - நீ
இறந்ததினமும்தான்
என்பதிங்கே
எத்தனை பேருக்கு
வெளிச்சம்?

பதினொன்றில்
பிறந்தும் இறந்தும்
போனதாலே
உன்னைப் பத்தோடு
பதினொன்றாக
எண்ணிவிட்ட பாவிகளோ
நாங்கள்?

இங்கே எல்லோரும்
பிறந்ததற்காக
இறந்து போக - நீயோ
மீண்டும் பிறக்கவே
இறந்து போனாயடா!

பலரது பெயரோடு
வருகின்ற பாரதியே
இன்று ஒரு
பிள்ளையாகவே
பிறந்து வா
நீ
பாடவும் சாடவும்
வேண்டியது
இன்னும் ஏராளம்
இங்கே...
--நாவிஷ் செந்தில்குமார்

Monday, December 1, 2008

இலக்கிய வெளியீடு

எங்கள் இல்வாழ்க்கையில்
இன்றொரு
இலக்கிய வெளியீடு...

பிரசவிக்கப் போகிறோம்
மடியில் சுமப்பதை
அவளும்...
மனதில் சுமப்பதை
நானும்...

பெயர் சொல்லும்
பிள்ளை ஒன்று தர
முகவரி தந்தவள்
செய்கிறாள்
முழுப்போராட்டம்...

அவள் வயிற்றில்
வலி பெருக - என்
அங்கமெங்கும்
இடி விழும்

யாழிசைக்கும் குரலாளின்
காலுதைக்கும் ஓசை கேட்டு
காது வழியே
செந்நீர் கசியும்

நீண்டு வளர்ந்த தாடியை
நீக்கும்பணி
விரல் தொடுக்கும்
நகம் கடிக்கும்
பழக்கம் வந்து
நட்புறவாய்
ஒட்டி நிற்கும்

பதினொரு ரிக்டர்
அளவான
பூகம்பம் ஒன்று - என்னை
வேரோடு அசைக்கும்

சுற்றம் மறந்து
சுயம் இழந்து
கண்ணீர் பெருகி
காட்சி மறைக்கும் - என்
சரீரம் சற்றே
செத்திருக்கும்

சிசுவின் சத்தம்...
ஜீவன் உயிர்க்கும்
தேகம் முழுக்கப்பல் முளைத்துப்
பலமாய்ச் சிரிக்கும்

பிறந்த மழலை
பார்த்துச் சிரிக்க - அதைப்
பெற்ற குழந்தையோ
மயங்கியிருக்க...

'ஒன்றே போதும்' எனும்
சிக்கன உறுதிமொழியை
மனம் எடுக்கும்
அக்கணம்
தேசப்பற்று என்பதெல்லாம்
இரண்டாம் பட்சம் - என்
தேவதைக்கு ஏதுமாகிவிடுமோ?
என்பதே என் அச்சம்
--நாவிஷ் செந்தில்குமார்