Monday, March 30, 2009

குடித்த அப்பா... குடிகாத்த அம்மா!

"அடியே" என்று தொடங்கும்
அப்பாவின் அழைப்பொலியிலிருந்து
அம்மாவிற்கான
அடுத்த யுத்தம்
தொடங்கிவிடும்...

சாராய நாக்கிற்கு
சாதரண உப்பும் காரமும்
பத்தவே பத்தாது...
எப்படிச் செய்தாலும்
இல்லை ருசியென்று
காரணத்தோடு அடித்த அப்பா
இப்போதெல்லாம்
காரணமின்றியும்
அடிக்கத் தொடங்கிவிட்டார்

எனக்காக
புத்தாடை கேட்கையில்
அப்பாவின்
நாக்கு கூசச் செய்யும்
பதிலால்
அம்மாவின் துன்புற்ற இதயம்
தூண்டில் புழுவாய்
துடிதுடித்துப் போகும்

நான் கால்சட்டை நனைத்த
இரவுகளை விட
அம்மாவின் கண்ணீரில்
நனைந்த இரவுகள்
ஆயிரம்

வீட்டையே விட்டு
வெளியே வராதவள்
அம்மா
எப்படியோ அவள்
சுதந்திரம் மட்டும்
களவு போனது...

தனக்கென ஒரு ஆசையும்
வைத்துக் கொள்ளாத
கற்காலத் தாய்
"உனக்கென வருபவளுக்கு
ஒரு குறையும் வைக்காதே"
எனச் சொல்லும் பொது
முற்போக்குத் தாய்

எதற்குப் பிறந்தாள்
என்ன சுகம் கண்டாள்
வாழ்கையில் இவள்?
என்ற கேள்விகளுக்கு
இதுவரை விடையில்லை...
மஞ்சள் கயிறால்
வென்றவர் அப்பா
தோற்றுப் போனவளும்
பிள்ளைக்காகவே
தோல்வியை மெல்லிய
தோளில் சுமப்பவளும்
அம்மா!

Thursday, March 19, 2009

தேர்தல் கூத்து

வெள்ளந்திகள் போல
பச்சோந்திகள் பல
நடமாடும் காலம்...
துண்டைப்பார்த்து
துளியும் ஏமாற வேண்டாம்!
வண்ணங்கள் வேறானாலும்
அவர்கள் தம்
எண்ணங்கள் ஒன்றேதான்!

கூட்டணி சேர்ப்பில்
கொட்டியிரைக்கப்படும் பணம்
கொடுத்துச் சிவந்த
வாங்கிப் பழுத்த
கரங்கள் குலுக்கிக்
கொண்டிருக்கும்
வண்ணச்சுவரொட்டிகள்
இனி
வழி நெடுகிலும்...

தொகுதிப் பங்கீட்டிலிருந்து
தொடங்கிவிடும்
குழாயடிச் சண்டை...
விளக்கெண்ணை விட்டு
விழிகளைத் தயார் செய்யுங்கள்
காணவேண்டியிருக்கும்
ஏராளமான அவலங்களை...

யாகம் வளர்க்கின்றனர்
அரசியல்வாதிகள்
தூபம் போடுவார்கள்
தீயிறங்க...
தகுதியில்லாதவனுக்கு
வரமாய்ப் போகின்ற
வாக்குதான்
உங்களுக்குச் சாபமாய்
விழுகின்றது!

இலவசங்களுக்கு
இரையாகிப் போகாதீர்கள்!
தாயன்பு தவிர்த்து
ஏனைய இலவசங்களுக்கு
இங்குண்டு
ஏதேனும் ஒரு
மிகப்பெரிய விலை!

மௌனங்கள்
கோர்த்துக் கோர்த்து
மாலையாக்கியது போதும் - அது
அப்பாவிகளின் வாழ்க்கையை
அலங்கரிக்காது ஒருபோதும்.

அடுத்தமுறை தவறு செய்ய
யோசிக்கும்
அடிவாங்கும் மாடு - இதை
அறியாது போனால் நாம்
அதனிலும் கேடு.

இந்த முறை தருவோம்
சரியான சவுக்கடி
இதைச் சொல்லவேண்டும்
உங்கள் மனம் அடிக்கடி...

Tuesday, March 10, 2009

யார் சொன்னது?

யார் சொன்னது
தன் வினை
தன்னைச் சுடும் என்று?
பொறுப்பில்லாதவன்
புகைத்த பின்
அணைக்காமல் போட்ட
வெண் சுருட்டு
செருப்பில்லாதவன்
காலையல்லவா சுட்டது!

யார் சொன்னது
குடி குடியைக் கெடுக்குமென்று?
குடி போதையில் ஒருவன்
பள்ளிச் சிறுமியைக்
கெடுத்தான் என்று
நாளிதழ் ஒன்று
செய்தி சொன்னது!

யார் சொன்னது
மது வீட்டுக்கு
நாட்டுக்கு உயிருக்கும்
கேடு என்று?
ஆதாயம் இல்லாமலா
அரசாங்கமே
விற்பனை செய்யுது?
–நாவிஷ் செந்தில்குமார்