Thursday, December 24, 2009

நடைவண்டி

01.
நடைவண்டி
-----------------
அண்ணனுக்குப் பிறகு அக்காவை
அவளுக்குப் பிறகு என்னையும்
நடக்க வைத்ததை
அண்ணனின் பிள்ளைக்குதவுமென
வைத்திருந்தாள் அம்மா...
அவனோ
புதியதாய் ஒன்றை வாங்கிவிட
யாருக்கும் தெரியாமல் ஒருநாள்
விறகாக்கிவிட்டாள் அண்ணி!
யாரேனும் இப்போது
ஏற்றிவிட்ட ஏணி பற்றிப் பேசினால்
நடக்க உதவிய நடைவண்டி
நினைவுக்கு வருகிறது...


02.
மனைவி பற்றிய கவிதைகள்
-------------------------------------
நாய் பற்றிய
கவிதையைப் படிக்கிறபோது
எனக்குப் பிடித்த மாதிரியாக
நாயொன்றை
உருவகப்படுத்திக்கொள்கிறேன்...
இவ்வாறே பிற
கவிதைகளை வாசிக்கிற போதும்
அவையொத்த பிம்பம்
மனவெளியில்
மிதந்து செல்கிறது
'இந்தச் சாயல்
இன்னொருவன் மனைவியுடையதாக
இருக்கக் கூடுமோ?'
என்ற கேள்வியால்
மனது லயிப்பதில்லை
மனைவி பற்றிய கவிதைகளில்...

நன்றி : வார்ப்பு.காம்

1 comment:

செந்தில் நாதன் Senthil Nathan said...

நல்லா இருக்குது நண்பா...

நடைவண்டி ரெம்ப பிடித்தது...