Tuesday, November 25, 2008

முதுகெலும்பு


பசுமைப் புரட்சி
செய்ய எண்ணி
பஞ்சப் பரதேசி ஆனவர்கள்
நாங்கள்...
வறுமை விலகிய
சந்தோசத்தில்
வாய் விட்டு சிரிக்கையில்
கலைந்த தூக்கத்தோடு
கனவு தொலைய...
துவண்டு போவோம்
நாங்கள்
விதைத்த விதை
மண்ணிலிருந்து
வெளிவராதா? என
விரக்தியோடு
வானம் பார்த்தே
விழிபெருத்தவர்கள்
நாங்கள்
முதுகெலும்பு என்ற
முன்னோர்களின் வார்த்தைக்கு
முரணாக
கூன்விழுந்தவர்கள் என
பெயர் பெற்றவர்கள்
நாங்கள்
வயிற்றுக்கு சோறு கேட்கும்
குழந்தைகளை
வானவில் பிடித்துத் தருவதாகக்
கூறி வளர்ப்போம்
உயிரின் சட்டைப்பையை
ஒருவேளை கஞ்சியால்
நிரப்புவோம்
பட்டினிச்சாவு - எங்கள்
பரம்பரை நோய்
--நாவிஷ் செந்தில்குமார்

No comments: