Monday, July 5, 2010

தொடர்பில்லாதவை

மூங்கில்களற்ற காடொன்றில்
புல்லாங்குழல் தேடி அலைந்து
களைத்துப் போகிறது
காற்று

கொட்டும் மழையில் நனைந்ததாலே
குரல் மாறிப் போனது...
நான் குயில்தான் எனச்
சத்தியம் செய்தது
காக்கையொன்று

முழுதும் சுவைத்தபின்
தூக்கி எறிந்தவனுக்கும்
தெரியாமல்
யாரோ சிலருக்கென
கனிகளை ஒளித்துவைத்திருக்கிறது
மாங்கொட்டையொன்று

காலுக்கு
புதுச்செருப்புப் போட்டு
கண்ணாடியில்
முகம் பார்த்தேன்
அழகாய்த் தெரிந்தது!

உண்ணுகிற
ஒவ்வொரு பருக்கையிலும்
தன் பெயர் இருப்பதாகச்
சொல்கிறவன்
தட்டில் மீதம் வைக்கிற
பருக்கைகளிலிருந்து
எவனோ ஒருவன்
பெயரை அழிக்கிறான்!


நன்றி : திண்ணை.காம்

3 comments:

க ரா said...

ரொம்ப நல்லாருக்கு செந்தில்.

கணேஷ்... said...

//மூங்கில்களற்ற காடொன்றில்
புல்லாங்குழல் தேடி அலைந்து
களைத்துப் போகிறது
காற்று//

மிக அருமை செந்தில் ரொம்ப நல்லா இருக்கு ...அருமையான கவித்துவம் ...

Mohan said...

அனைத்துமே அருமை!